முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுவது ஏன்? - தமிழக அரசு விளக்கம்

சனிக்கிழமை, 28 ஜனவரி 2023      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2023-01

Source: provided

சென்னை : ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுவது ஏன்? என்று விளக்கமளித்துள்ள தமிழக அரசு, மார்ச் 2024-க்குள் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘பொது விநியோகத் திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்குச் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என அறிவித்து மத்திய அரசால் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுச் செயல்பட்டு வருகிறது.

செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 உள்ளடக்கிய நுண்ணோட்டச்சத்து சேர்ந்து செறிவூட்டப்பட்ட மணிகளாக தயார் செய்து செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளை, சாதாரண அரிசியுடன் 1:100 என்ற விகிதத்தில் கலவை செய்து செறிவூட்டப்பட்ட அரிசியாக மாற்றி, பொதுவிநியோகத் திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இத்திட்டம் தமிழ்நாட்டில் கடந்த 21.09.2020 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அறிமுகத் திட்டமாக (Pilot Scheme) செறிவூட்டப்பட்ட அரிசியினைப் பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் வழங்க அறிவிக்கப்பட்டு 01.10.2020 முதல் 31.03.2022 வரை செயல்படுத்தப்பட்டது. இதனை மத்திய அரசு 3 நிலைகளாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நிலை – I : மத்திய அரசு மாநிலம் முழுவதும் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டு, இந்திய உணவுக் கழகத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி பெறப்பட்டு ஐனவரி 2022 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

நிலை – II : மத்திய அரசு நாடு முழுவதும் 112 மாவட்டங்களை முன்னோடி மாவட்டங்களாகத் தேர்வு செய்துள்ளது. அவற்றில் தமிழ்நாட்டில் விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களை முன்னோடி மாவட்டங்களாக மத்திய அரசு தேர்வு செய்தது. இம்மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றிற்கு 01.12.2022 முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

நிலை – III : மார்ச் 2024 –க்குள் மத்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசியைப் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்ப அட்டைதார்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மதிய உணவுத் திட்டம் மற்றும் பிற நலத்திட்டங்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலமாக செறிவூட்டப்பட்ட அரிசியை இந்திய உணவுக் கழகத்திலிருந்து தற்போது பெறப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. 

செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதால் இரும்புச் சத்து, ஃபோலிக்அமிலம் மற்றும் வைட்டமின் பி12 ஆகிய மூன்று நுண்ணோட்டச்சத்துக் குறைபாட்டினைப் போக்கி ரத்தச் சோகையில்லா நிலையினை உருவாக்கி ஆரோக்கியமாக வாழ உதவிகரமாக இருக்கும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து