முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 12 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

வியாழக்கிழமை, 23 மார்ச் 2023      தமிழகம்
Fishermen-2023-03-23

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று முன்தினம் 2 விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 12 மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று (மார்ச்.23) அதிகாலை கைது செய்துள்ளது.

ஜெகதாபட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து 200 விசைப் படகுகளில் சுமார் 1,000 மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அதில், என்.முருகானந்தம் (40) என்பவருடன் அவரது படகில் சென்ற டி.விசாகலிங்கம்(50), கே.நயில்(21), எஸ்.பாரதிதாசன்(52), கே.சசிகுமார்(25), ஆர்.ரவி(26) ஆகியோரும், சி.மாலதிக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற கே.சிவக்குமார் (43), டி.கலையரசன்(23), சி.லோகேஸ்வரன்(24), ஆர்.சக்தி(25), எம்.பிரபு(35), எஸ்.சுந்தர மூர்த்தி(45) ஆகிய 12 பேரும் என ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் நேற்று அதிகாலை மீன்பிடித்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி 12 மீனவர்களை கைது செய்ததோடு, அவர்களது 2 விசைப் படகுகளையும் அந்நாட்டில் உள்ள காங்கேசன்துறை கடற்படை தளத்துக்கு கொண்டு சென்றனர். மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அவர்களின் குடும்பத்தினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதனிடையே, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் சிறைபிடிக்கப்பட்டுள்ள 2 விசைப் படகுகளையும் மீட்டுத் தருமாறு ஜெகதாப்பட்டினம் மீனவர் சங்கத்தினர் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து