முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரிசிக்கொம்பன் யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

செவ்வாய்க்கிழமை, 30 மே 2023      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

சென்னை : அரிசிக்கொம்பன் யானை தாக்கியதில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து  அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கடந்த 27-ம் தேதி அன்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பால்ராஜ் என்பவர் அரிசிக்கொம்பன் என்ற காட்டுயானையை எதிர்பாராதவிதமாக பார்த்ததில் அதிர்ச்சியடைந்து கீழே விழுந்து சிகிச்சைக்காக தேனி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு சிறப்பான சிகிச்சையளிக்கப்பட்ட போதும் அதற்கு பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த பால்ராஜின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும் இந்த அரிக்கொம்பன் என்ற காட்டு யானையைப் பிடிப்பதற்கு தமிழ்நாடு அரசின் வனத்துறை அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.  இதற்கென மூத்த அனுபவம் வாய்ந்த வன அலுவலர்களைக் கொண்ட ஒரு சிறப்புக் குழு திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநரின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.  

மேலும், கால்நடை மருத்துவர்களைக் கொண்ட ஒரு குழுவும், முதுமலை மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் உள்ளூர் வனப்பகுதியைச் சார்ந்த 16 யானைத்தட கண்காணிப்புக் காவலர்கள் இந்த அரிசிக்கொம்பன் என்ற காட்டுயானையின் நடமாட்டத்தை கண்காணித்து அந்த யானையை பத்திரமாக வனப் பகுதிக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.  

இதற்கென ஒரு தனி கட்டுப்பாட்டு அறையும் கம்பம் வனச் சரக அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இது தவிர, பிறபகுதியினைச் சார்ந்த 200 வனத்துறை அலுவலர்கள் அப்பகுதி மக்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

தேனி மாவட்ட கலெக்டரும் அங்குள்ள நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். இவ்வாறு அதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து