முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      இந்தியா

 

புது டெல்லி,பிப்.21 - கூட்டுக் குழு பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்ட நிலையில் பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது - 25 ம் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கல்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வந்த விவகாரத்தில் கிட்டத்தட்ட ஒரு தீர்வு ஏற்பட்டு விட்ட சூழ்நிலையிலும் பரபரப்பான சூழ்நிலையிலும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. முதல் நாளான இன்று ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார். 25 ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், 28 ம் தேதி மத்திய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது.

ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை நாட்டுக்கு ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ஜே.பி.சி. எனப்படும் பாராளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க, பாரதீய ஜனதா போன்ற கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதன் காரணமாக கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரே முற்றிலுமாக ஸ்தம்பித்துப் போனது. அந்த கூட்டத் தொடரில் எந்த அலுவல்களுமே நடக்கவில்லை. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலும் இந்த பிரச்சினையை எழுப்புவோம். விட மாட்டோம் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் ஆளும் அரசு அரண்டு போனது. 

இதையடுத்து கூட்டுக் குழு விவகாரத்தில் மத்திய அரசு ஒரு முடிவுக்கு வந்து விட்டது. வரும் புதன் கிழமைக்குள் அதாவது 23 ம் தேதிக்குள் கூட்டுக் குழு அமைப்பது பற்றி மத்திய அரசு ஒரு முடிவுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக 23 ம் தேதியன்று ஜே.பி.சி. பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலை பிரதமர் மன்மோகன்சிங், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சல் ஆகியோர் சூசகமாக தெரிவித்து விட்டனர். ஆகவே ஜே.பி.சி. விவகாரத்தில் கிட்டத்தட்ட ஒரு முடிவு ஏற்பட்டு விட்டது. 

இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இந்த கூட்டத் தொடரை அமைதியாக, சுமூகமாக நடத்துவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களுடன் நேற்றும் சபாநாயகர் மீராகுமார் ஆலோசனை நடத்தினார். ஏற்கனவே இவர் பலமுறை இது போன்ற ஆலோசனைகளை நடத்தி விட்டார். அப்போது எதிர்க்கட்சிகள் எல்லாம் கூட்டுக் குழு அமைப்பதுதான் ஒரே தீர்வு என்று வலியுறுத்தின. அதன் எதிரொலியாகத்தான் மத்திய அரசும் பணிந்து விட்டது. இந்த சூழலில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது.  

இது இந்த ஆண்டில் நடைபெறும் முதலாவது கூட்டத் தொடராகும். பொதுவாக ஆண்டின் முதல் கூட்டத் தொடரின் முதல் நாளன்று இரு சபைகளும் அடங்கிய கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவது வழக்கம். அந்த மரபுப்படி இன்று பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரதீபா உரையாற்றுகிறார். அவர் ஆற்றும் உரைக்கு மத்திய மந்திரி சபை ஏற்கனவே ஒப்புதலும் அளித்து விட்டது. இந்த கூட்டத் தொடர் மார்ச் 14 ம் தேதி வரை ஒரு பகுதியாகவும், ஏப்ரல் 4 ம் தேதி முதல் 21 ம் தேதி வரை 2 வது பகுதியாகவும் நடைபெறுகிறது. முதல் பகுதியில் 17 அமர்வுகளும், இரண்டாவது பகுதியில் 12 அமர்வுகளும் இடம் பெறும். வழக்கமாக, பட்ஜெட் கூட்டத் தொடர் நீண்ட நாட்கள் நடக்கும். ஆனால் இப்போது தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் நெருங்குவதால் பட்ஜெட் கூட்டத் தொடரின் நாட்கள் சுருக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற 25 ம் தேதியன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்கிறார். சட்டசபை தேர்தல் வருவதால் ரயில் கட்டணம் உயராது என்று அடித்துச் சொல்லலாம். வரும் 28 ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்கிறார். சட்டசபை தேர்தல் நெருங்குவதால் நிச்சயம் புது வரிகள் இருக்காது.  மேலும் வருமான வரி விலக்கு உச்சவரம்பும் ரூ 2 லட்சமாக உயரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல சலுகைகளும் இருக்கலாம். இந்த கூட்டத் தொடரில் ஜி.எஸ்.டி. மசோதா உட்பட பல முக்கிய மசோதாக்கல் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்