முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 புறநகர் காவல் நிலையங்களை முதல்வர் திறந்துவைத்தார்

சனிக்கிழமை, 10 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.10 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில், சென்னைவாழ் மக்களுக்கு காவல் சேவையை மேம்படுத்தும் வகையில், 12 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் தரமணி, கானாத்துர் மற்றும் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் ஆகிய மூன்று புதிய சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களையும், வளசரவாக்கம், செம்மஞ்சேரி ஆகிய இரண்டு போக்குவரத்து காவல் நிலையங்களையும் காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார்கள்.

மாநிலத்தில் அமைதியான சூழ்நிலை நிலவ காவல்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப காவல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், தரமணி மற்றும் கானகம் பகுதி பொது மக்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு வெகுதூரத்திலுள்ள வேளச்சேரி காவல் நிலையத்திற்கு இதுநாள்வரை சென்று கொண்டிருந்தனர்.  தரமணி மற்றும் கானகம் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன் பெரும் வகையில் தரமணி காவல் நிலையம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.  இக்காவல் நிலையம், ராஜீவ் காந்தி சாலையில் உள்ள தகவல் தொழில் நுட்பங்காக்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

தரமணி காவல் நிலையத்தை துவக்கி வைத்தமைக்காக தமிழக முதலமைச்சருக்கு  தரமணி பகுதியில் வாழும் பொதுமக்களின் சார்பாக காமாட்சி நன்றி தெரிவித்து பேசியதாவது:​ நான் தரமணி பகுதியில் 40 ஆண்டு காலமாக வசித்து வருகிறேன்.  எங்கள் பகுதியில் காவல் நிலையம் திறந்து வைத்ததற்காக, எங்கள் பகுதி மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  இனி அச்சமில்லாமல், பயமில்லாமல் நடந்து செல்வோம், நன்றி பெரிய பரப்பளவைக் கொண்டிருந்த லாங்கரை காவல் நிலையம் இரண்டாக பிரிக்கப்பட்டு, பனையூர், உத்தண்டி, கானாத்துர், முட்டுக்காடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கி கானாத்தூர் காவல் நிலையம் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது.  இக்காவல் நிலையம் கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள குடியிருப்பு பகுதி மற்றும் சுற்றுலா மையங்கள் அடங்கியுள்ள பகுதிகளில் காவல் பணியை மேம்படுத்த ஏதுவாக இருக்கும். கோயம்பேட்டில் பேருந்து நிலையத்தில் அதிகரித்துக்கொண்டே வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு, அவர்களின் பிரத்யேக பாதுகாப்பிற்காக சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் புதியதாக காவல் நிலையம் துவங்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் காவல்நிலையம் துவக்கி வைத்தமைக்காக தமிழக முதலமைச்சருக்கு கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வரும் சரோஜா நன்றி தெரிவித்து பேசினார்.

மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள வளசரவாக்கம் மற்றும் செம்மஞ்சேரி பகுதிகளில் போக்குவரத்தை நெறிப்படுத்துவதற்காக, இரண்டு போக்குவரத்து காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை பெருநகர காவல் துறைக்கு கூடுதல் பலம் சேர்த்து, சென்னைவாழ் மக்களுக்கு மேம்பட்ட சேவையை அளிக்கும் வகையில் 5 காவல் நிலையங்களை நேற்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்