முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரன்கோவில் வருகை தரும் கருணாநிதிக்கு கறுப்புக்கொடி

திங்கட்கிழமை, 12 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை மார்ச் 13 - தேர்தல் பிரச்சாரத்திற்காக சங்கரன்கோவில் வருகை தரும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கறுப்பு கொடி காட்டப்போவதாக அணுமின் நிலைய எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்தார். நெல்லையில் கூடன்குளம் போராட்ட குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கூடன்குளம் அணுஉலையை மூடிட வலியுறுத்தி வருகிற 15ம் தேதி 544 கிராமங்களில் வசிக்கும் தமிழக மீனவர்கள் ஒட்டுமொத்தமாக கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அன்றைய தினம் மீனவ கிராமங்களில் கருப்புக்கொடிகள் ஏற்றப்பட உள்ளது.

15ம் தேதி இடிந்தகரையில் நடைபெற உள்ள கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வட இந்தியர்களும், கேரள மாநில ஆதரவாளர்களும் வருகை தர உள்ளனர். கூடன்குளம் அணு உலை குறித்து திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளதை கண்டிக்கிறோம்.

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தால் தினமும் 5 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது என, இந்திய அணுமின் கழக இயக்குனர் பரத்வாஜ் கூறியுள்ளதால் இனி தாமதிக்காமல் உடனடியாகக் மத்திய அரசு கூடங்குளம் அணுமின் நிலையத்தினைத் திறப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என கூறும் கருணாநிதியின் கட்சியை சேர்ந்தவர்களால் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்ட போது வாய் திறக்காதது ஏன்? இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது கருத்து தெரிவிக்காதவர் தற்போது கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன?

திமுக தலைவர் கருணாநிதி கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வருகிற 15ம் தேதி சங்கரன்கோவிலுக்கு பிரசாரத்திற்கு அவர் வருவதை முன்னிட்டு அன்றைய தினம் அவருக்கு கறுப்பு கொடி காட்டும் போராட்டத்தை நடத்த உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். போராட்டகுழுவினர் புஷ்பராயன், சேசுராஜன், சிவசுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்