முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாரி கவிழ்ந்து பலியான 12 பேர் குடும்பங்களுக்கு நிதியுதவி

புதன்கிழமை, 30 மே 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, மே.30 - தருமபுரி மாவட்டம் குண்டாங்காடு கிராமத்தில் லாரி  கவிழ்ந்து பலியான 12 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், வெள்ளிசந்தை உள்வட்டம், திம்மராயனஹள்ளி தரப்பு குண்டாங்காடு  கிராமத்தில் 27.5.12 அன்று மாங்காய்களை ஏற்றி கிருஷ்ணகிரி சென்று கொண்டிருந்த லாரி மாரவாடி - திம்மராயனஹள்ளி சாலையின் மலைச் சரிவில் திரும்பும் போது, தலைக்குப்புற கவிழ்ந்ததில், லாரியில் பயணம் செய்த 10 நபர்கள் சம்பவ இடத்திலேயும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இரண்டு நபர்களும் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் ஆழ்ந்த வருத்தமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

இச்சாலை விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இத்துயரச் சம்பவத்தில் 31 நபர்கள் காயம் அடைந்துள்ளனர் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் இவர்களுக்கு நல்லமுறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், தருமபுரி மாவட்டம் நிருவாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், இவர்கள் அனைவரும் விரைவில் பூரணகுணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த லாரியில் பயண செய்தவர்களின் வறுமையான குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 25,000/-  ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 10,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்