முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலையில் ஒரு பேச்சு - மாலையில் ஒரு விளக்கம்...!

வியாழக்கிழமை, 31 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.31 - பெட்ரோல் விலையை குறையுங்கள், கூட்டணியில் இருந்து விலகும் நிலையை உருவாக்க வேண்டாம் என்று கருணாநிதி பேசியுள்ளார். பெட்ரோல் விலையை மத்திய அரசு குறைக்க கோரி    தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முழுவதும் நேற்று   நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:

மத்திய அரசு உயர்த்தியிருக்கின்ற பெட்ரோல் கட்டணத்தை கிட்டத்தட்ட 7.50 ரூபாய் அளவிற்கு உயர்த்தப்பட்டிருக்கின்றன. அந்தக் கொடுமையான உயர்வினை கண்டித்து எதிர்க்கட்சிகள் மாத்திரமல்ல, திராவிட முன்னேற்றக் கழகம் மாத்திர மல்ல, நாம் மாத்திர மல்ல, மத்திய சர்க்காரிலே அமைச்சராக இருக்கின்ற, பாதுகாப்பு அமைச்சராக இருக்கின்ற ஏ.கே. அந்தோணியே அதைக் கண்டித்து இருக்கிறார்.

இந்த விலை உயர்வை ஏற்றுக்கொள்ள இயலாது என்ற கருத்தை அறிவித்திருக்கிறார். ஆகவே நான் சொல்வதை கேட்கா விட்டாலும், எதிர்க்கட்சிகள் சொல்வதைக் கேட்கா விட்டாலும் நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங், அவருடைய அமைச்சரவையிலே இருக்கின்ற பாதுகாப்பு அமைச்சர் ​ மிகப் பாதுகாப்பாக சொல்லியிருக்கின்ற இந்த கோரிக்கையை அவர்கள் ஏற்று நிறைவேற்ற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் அரசின் காதுகளில், ஏழையெளிய மக்களின் கூக்குரலும், நடுத்தர மக்களுடைய கூக்குரலும் விழுமேயானால், அந்தக் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு நமக்கு இருக்கிறது 

அந்தக் காரியத்தைச் செய்ய மத்திய அரசு இரண்டும் போட்டி போட்டுக் கொண்டு முன் வர வேண்டுமென்று நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையில் மத்திய அரசோடு கூட்டணியிலே இருந்தாலுங்கூட கூட்டணி வேறு, அதே நேரத்தில் மக்களுக்கு விரோதமான காரியங்கள் நடைபெறும்போது அதைத் தடுக்கின்ற நிலையில் செயல் படுவதுவேறு.

நாங்கள், திராவிட முன்னேற்றக் கழகம், பா.ஜ.க. வோடு கூட்டணியிலே இருந்து கொண்டு ​ வி.பி. சிங் பிரதமராக இருந்த போதும் அந்தக் கூட்டணியிலே இருந்து கொண்டு ​ எந்த இடத்தில் இருந்தாலும் நம்முடைய பிரதான, அடிப்படை கொள்கைகளுக்கு மாசு வருமேயானால் அதைச் சுட்டிக்காட்டி, அதைத் தீர்க்கக் கூடிய, தீர்த்து வைக்கக் கூடிய பெரும் பொறுப்பை மத்தியிலே உள்ளவர்களுக்கு அளித்து, அந்தப் பொறுப்பை அவர்கள் நிறைவேற்றா விட்டால், எதிர்ப்புக் குரலை உயர்த்தி, அவர்களோடு இருக்கிற வரையிலே இருந்து ​ முடியாவிட்டால் நாம் தனியாகப் பிரிந்து நம்முடைய கொள்கைகளைத் தான் நாம் வலியுறுத்தி வந்திருக்கிறோம். அதற்கு இடம் தராத வகையில் மத்திய அரசு  நடந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். காலையில் கூட்டணியில் இருந்து விலகும் நிலையை உருவாக்க வேண்டாம் என்று தொண்டர்கள் மத்தியில் கைதட்டலுக்காகப் பேசி விட்டு மாலையில் செய்தியாளர்களிடம் நான் எங்கே அப்படி பேசினேன். பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்த போது ஏற்பட்ட நிலையைத்தான் எடுத்துக் கூறினேன் என்று புதிய விளக்கம் அளித்தார்.கருணாநிதியின் அந்தர் பல்டியையே இது எடுத்துக் காட்டுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்