முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் அ.தி.மு.க. செயலாளர் இல்ல திருமண விழா

சனிக்கிழமை, 2 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

திண்டுக்கல், ஜூன்.2 - திண்டுக்கல் அ.தி.மு.க. நகரச் செயலாளர் பி.ராமுத்தேவர் இல்ல திருமண விழா நேற்று (1.6.2012) வெள்ளிக்கிழமை வெகு சிறப்புடன் நடைபெற்றது. இம்மணவிழாவில் அமைச்சர் பெருமக்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமானோர் பங்கேற்றுமணமக்களை வாழ்த்திச் சென்றனர். திண்டுக்கல் அ.தி.மு.க. நகரச்செயலாளரும், தொழிலதிபருமான பி.ராமுத்தேவர் - ஆர்.ஜானகி ஆகியோரது மகன் ஆர். பிரபுவிற்கும், தேனி மாவட்டம் கே.கே.பட்டியைச் சேர்ந்த இந்தியன் ஆயில் டீலர் பி.முத்தையா - ஏ.அமுதா ஆகியோரது மகள் ஏ.கீர்த்திகாவிற்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டது. இவர்களது திருமணம் நேற்று ஜூன் மாதம் 1ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.25 மணி முதல் 10.25 மணிக்குள் திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு அச்யுதா அகாடமி மேல்நிலை பள்ளி உள் விளையாட்டரங்கில் மிக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான திருமண மண்டபத்தில் நடைற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொருளாளரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் இரா.விசுவநாதன், மதுரை நகர் மாவட்டச் செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ, மதுரை மாநகராட்சி மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்து மணமக்களை வாழ்த்தினர்.

முன்னதாக திருமாங்கல்யத்தை மதுரை மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எடுத்துக் கொடுக்க மணமகன் பிரபு அதனை மணமகள் கீர்த்திகா கழுத்தில் அணிவித்தார். கூடியிருந்த சுற்றத்தார் அனைவரும் மணமக்கள் பல்லாண்டு வாழ்க, வாழ்க என வாழ்த்தினர். திருமண மண்டபத்திற்கு அருகே அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான உணவுப் பந்தலில் விழாவில் கலந்து கொண்ட அனைவரும் அறுசுவை உணவை அருந்தினர். கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் 1300 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய அளவில் உணவுப்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். 

திருமண நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத்தலைவரும் முன்னாள் எம்.பியுமான சி.சீனிவாசன், நத்தம் தொகுதி செயலாளர் ஆர்.வி.என். கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.என்.வேணுகோபால், பழனிச்சாமி, திண்டுக்கல் நகர்மன்றத் தலைவர் வி.மருதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மேலும் மாவட்ட கலெக்டர் ந.வெங்கடாசலம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திவான்பாட்ஷா, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயபாலன்,  தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், அகரம் பேரூர் கழக செயலாளரும் துணைத்தலைவருமான சக்திவேல், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் வைகைபாலன், நடிகர் கருணாஸ், பார்வர்டு பிளாக் எம்.எல்.ஏ. கதிரவன், திண்டுக்கல் எம்.எல்.ஏ. பாலபாரதி, ஆத்தூர் ஒன்றிய செயலாளர் பி.கே.டி.நடராஜன், யூனியன் சேர்மன்கள் கோபி, நாகரத்தினம், தண்டபாணி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் செல்வராகவன்,  அ.தி.மு.க. மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள் தற்போதைய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், நகரின் முக்கிய பிரமுகர்கள், அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திச் சென்றனர்.

திருமணத்திற்கான ஏற்பாடுகளை பி.ராஜூத்தேவர், பி.ராஜாத்தேவர், பி.எஸ்.பிச்சை, ஏ.சந்திரசேகரன், ஆர்.குருசாமி, ஆர்.ஜெயக்குமார். சுரேஷ்பாபு மற்றும் உறவினர்கள் சிறப்புற செய்திருந்தனர்.  திருமண விழாவில்  திரைப்பட பின்னணி பாடகி கிரேஸ் கருணாஸ் வழங்கிய இன்னிசை கச்சேரி வெகுவாக பார்வையாளர்களை கவர்ந்தது.

அ.தி.மு.க. நகரச் செயலாளர் இல்லத் திருமண விழாவை முன்னிட்டு திண்டுக்கல் நகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது. மேலும் விழா நடைபெற்ற இடத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கூடியதால் கிட்டத்தட்ட கட்சி மாநாடு போல் தோற்றமளித்தது. விருந்தினர்கள் எவ்வித சிரமமுமின்றி மணமக்களை வாழ்த்தி உணவருந்தி செல்லும் வகையில் விழா ஏற்பாடுகள் மிக பிரமாதமாக செய்யப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்