முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது முறையாக பட்டம் வென்றார் இந்தியாவின் சாய்னாநேவால்

திங்கட்கிழமை, 18 ஜூன் 2012      விளையாட்டு
Image Unavailable

 

ஜாகர்தா, ஜுன் - 18 - இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் பட்டத்தை மூன்றாவது முறையாக பெற்று சாதித்திருக்கிறார். இந்தோனேஷிய தலைநகர் ஜாகர்தாவில் இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வந்தன. இப்போட்டிகளில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பலர் பட்டத்தை வெல்ல கடுமையாக போராடினர். இந்த போட்டித் தொடரில் இந்தியா ஆடவர் மற்றும் பெண்கள் பிரிவில் மிகச் சிறப்பாக செயல்பட்டது. ஒலிம்பிக் போட்டித் தொடருக்கு தேர்வு பெற்றுள்ள இந்திய வீரர்கள் காஷ்யப் மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் ஆரம்பம் முதல் மிகச் சிறப்பாக செயல்பட்டு அரை இறுதி போட்டியை எட்டினர். ஆனால் காஷ்யப் அரை இறுதி போட்டியில் இந்தோனேஷிய வீரரிடம் தோல்வி அடைந்ததால் தொடரில் இருந்து வெளியேறினார். ஆனால் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த சாய்னா நேவால் அரை இறுதியில் கொரிய வீராங்கனையை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் இறுதிப் போட்டிக்கு தொடர்ந்து 4 வது முறையாக தகுதி பெற்றார் சாய்னா.  இறுதிப் போட்டியில் சாய்னா சீனாவின் ஜியூரூய் லீயை சந்தித்தார். உலகத் தரவரிசையில் 4 ம் இடத்தில் இருக்கும் லீ, ஏற்கனவே சாய்னாவுடன் மோதிய 4 போட்டிகளில் 3 இல் வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. வலுவான லீ தனது அதிரடி துவக்கத்தின் மூலம் முதல் செட்டில் சாய்னாவை எளிதில் வீழ்த்தினார்.  இரண்டாவது கேமில் எழுச்சி கண்ட சாய்னா கடும் போராட்டத்திற்குப்பின் அந்த கேமை 22 - 20 என்ற கணக்கில் வென்றார். இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3 வது கேமை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர். இந்த போட்டி மிகக் கடுமையாக இருந்தது. இந்த கேமில் லீ பல ரிட்டர்ன் ஷாட்களை நெட்டில் அடித்ததால் பாயிண்ட்களை இழந்தார். இதை பயன்படுத்தி மிகச் சிறப்பாக செயல்பட்ட நேவால் 21 - 19 என்ற கணக்கில் மூன்றாவது கேமை வென்று பட்டத்தை மூன்றாவது முறையாக கைப்பற்றினார். இதற்கு முன் 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் இவர் இங்கு  பட்டம் வென்றுள்ளார். கடந்த ஆண்டு இத் தொடரில் 2 ம் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய்லாந்து ஓபன் போட்டியில் பட்டம் வென்ற சாய்னா நேவால், சில தினங்களுக்கு உள்ளாகவே இந்த போட்டியில் வென்றுள்ளார். இது இவர் இந்த ஆண்டில் வெல்லும் 3 வது பட்டமாகும். ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த மாதம் துவங்கவுள்ள நிலையில் சாய்னாவின் இந்த எழுச்சி இந்திய பேட்மிண்டன்  ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி குறித்து சாய்னா கூறுகையில், இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை சீன வீராங்கனைகள் அனைவருமே கடுமையான சவாலைத் தரக்கூடியவர்கள் என்றார். மேலும் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எனக்காக ஆரவார குரல் கொடுத்தது எனக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்தது என்றார். 

தோல்வியடைந்த லீ கூறுகையில், நான் பலமுறை வெற்றிக்கு மிக அருகில் வந்து அதை கோட்டைவிட்டேன். மிகவும் உணர்ச்சிவசப்பட்டு ஆடியதால் பல பாயிண்ட்களை  இழக்க நேரிட்டது. ஆனால் நேவால் அதனை பயன்படுத்திக்கொண்டார் என்றார். 

இப்போட்டித் தொடரில் ஆடவர் பிரிவில் இந்தோனேஷியாவின் சைமன் சந்தோசோ, சீனாவின் டு பென்கியோவை  21 - 18, 13 - 21, 21 - 11 என்ற கணக்கில் வென்று பட்டத்தை கைப்பற்றினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்