முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கள படையினருக்கு பயிற்சியா? ஜெயலலிதா கண்டனம்

வியாழக்கிழமை, 5 ஜூலை 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூலை 6 - இலங்கைத் தமிழர்கள் முகாம்களில் வாடிக்கொண்டிருக்கையில், இலங்கை விமானப் படைவீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பது தமிழர்களை அவமதிக்கும் செயல் என்றும், அந்த வீரர்களை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் முதல்வர்  ஜெயலலிதா மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் இனப் படுகொலை நடத்திய சிங்கள படையினர் அப்பாவி பொதுமக்களையும், குழந்தைகளையும் கொன்று குவித்தனர். மேலும் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களை அவர்களது இருப்பிடங்களில் குடியமர்த்தாமல் அவர்களை முள்வேலி முகாம்களிலேயே வைத்திருக்கிறது. சர்வதேச சமுதாயம் இதற்கு எதிராக கடுமையான கண்டனக் குரல் கொடுத்தும் அவையெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்துவருகிறது. இந்நிலையில் இந்திய அரசு இலங்கை விமானப்படை வீரர்கள் 9 பேருக்கு சென்னையில் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது.  

இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கை இனக் கலவரத்தில் இடம் பெயர்ந்து, இன்னலுற்றுக் கொண்டிருக்கும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்கவும், அங்குள்ள சிங்களர்களுக்கு இணையாக அவர்கள் வாழவும் தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்ற குரல் உலக அளவில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்ற இந்தத் தருணத்தில், இலங்கை நாட்டின் ஒன்பது விமானப் படை வீரர்கள் தமிழ்நாட்டில் உள்ள தாம்பரம் விமானப்படை நிலையத்தில் ஒன்பது மாத கால தொழில்நுட்பப் பயிற்சி பெற வந்திருக்கிறார்கள் என்ற செய்தி தமிழர்களின் நெஞ்சில் வேலைப் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது. 

மத்திய அரசின் தமிழர்களுக்கு எதிரான, தமிழ் இனத்திற்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையில் முகாம்களில் வாடிக்கொண்டிருக்கும் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்று, சிங்களவர்களுக்கு சமமான உரிமைகளைப் பெறும் வரை, பிற நாடுகளுடன் இணைந்து இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்திலே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது, வாய் மூடி மெளனியாக உள்ள மத்திய அரசு, இலங்கை விமானப்படை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பது தமிழர்களை அவமானப்படுத்தும் செயல் ஆகும்.

இலங்கை இனப் போரில், பன்னாட்டு போர் விதிமுறைகளை மீறி செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்ற இந்தத் தருணத்தில், இலங்கை நாட்டைச் சேர்ந்த விமானப் படை வீரர்களுக்கு, இந்தியாவில், அதிலும் தமிழகத்தில் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பது பொருத்தமற்றது மட்டும் அல்ல, தமிழர்களுக்கு எதிரான செயலும் ஆகும் என்பதை மத்திய அரசுக்கு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.  உடனடியாக இந்த நடவடிக்கையை திரும்பப் பெற்றுக் கொண்டு இலங்கை விமானப் படை வீரர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப ஆவன செய்ய வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்