முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் தொடர்ந்த வழக்கில் கருணாநிதி ஆஜராக சம்மன்

புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.23 - முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் கருணாநிதி, ஸ்டாலின், விஜயகாந்த், ராமதாஸ் ஆகியோருக்கு கோர்ட்டில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்புமாறு சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி பொன்.கலையரசன் உத்தரவிட்டார்.

விஜயகாந்த், கடந்த ஆகஸ்ட் முதல் தேதி ஜெயலலிதா அறிக்கையின் மூலம் ஆட்சி நடத்துகிறார் என்று கூறியிருந்தார். இந்த தகவல் இந்து பத்திரிகையில் வெளிவந்தது. இது குறித்து முதல்வர் ஜெயலலிதா சார்பில் இந்து பத்திரிகையின் மீதும், விஜயகாந்தின் மீதும் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மாநகர அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

மு.க.ஸ்டாலின், ஆகஸ்ட் 2-ம் தேதியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் காலரா நோய் குறித்து பேட்டி அளித்திருந்தார். அதில் சென்னை மாநகராட்சி காலராவை தடுக்க முயற்சி எடுக்கவில்லை என்றும், தி.மு.க.வினர் தான் காலராவை தடுக்க தெருக்களில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றும், முதலமைச்சரும், சென்னை மாநகராட்சியும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது போல் கூறியிருந்தார். இது குறித்து அவர் மீதும் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

ஆகஸ்ட் 3-ம் தேதி முரசொலியில், கலைஞர் கேள்வி பதில் பகுதியில் ஜெயலலிதா பற்றி கூறும்போது, முதல்வர் கொடநாட்டில் இருப்பது குறித்து ராமதாஸ் கூறியுள்ளார். அதைப்பற்றி ஜெயலலிதாவுக்கு ஓட்டுபோட்ட மக்களிடம் கேளுங்கள் என்று கூறியிருந்தார். இதற்காக கருணாநிதி மீதும், முரசொலி மீதும் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

ஆகஸ்ட் 3-ந் தேதி ஆனந்த விகடன் பத்திரிகை பேட்டியில் கொடநாட்டில் முதலமைச்சர் தங்கியிருப்பது குறித்து குறிப்பிட்ட ராமதாஸ், மாதக்கணக்கில் மலையிலா? என்று கூறியிருந்தார். இது குறித்து ராமதாஸ் மீதும் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அவதூறு வழக்குகள் நேற்று சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி பொன்.கலையரசன் முன் விசாரணைக்கு வந்தது. இந்த அவதூறு வழக்குகளில் முகாந்தரம் இருப்பதாக கூறிய நீதிபதி, சம்மந்தப்பட்டவர்களுக்கு கோர்ட்டில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்புமாறு உத்தரவிட்டார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும், மு.க.ஸ்டாலினிக்கும் அக்டோபர் 10-ம் தேதியும், ராமதாசுக்கு அக்டோபர் 9-ம் தேதியும், விஜயகாந்திற்கு அக்டோபர் 15-ம் தேதியும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்