முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பை வென்ற தமிழக வீரர் அஸ்வினுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு

செவ்வாய்க்கிழமை, 5 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.- 5 - 28 ஆண்டுகளுக்குப்பிறகு  உலகக்கோப்பையை  வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் ஆர்.அஸ்வினுக்கு சென்னையில் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்திய 10வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முன்னதாக 1983ல் கோப்பையை வென்ற இந்தியா, இப்போது 28ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் கோப்பையை வென்று தாயகத்திற்கு பெருமை தேடித்துள்ளது.

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் ஆர்.அஸ்வின் 2 போட்டிகளில் விளையாடி அதில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்திய அணியினருக்கு பாராட்டுகளும், பரிசுகளும் குவிந்து வரும் நிலையில், தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வினுக்கு தமிழக அரசு ரூ.1 கோடி அறிவித்துள்ளது. 

இந்த நிலையில் மும்பையிலிருந்து  நேற்று சென்னை வந்த ஆர்.அஸ்வினுக்கு,  சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிரிக்கெட் சங்க நிர்வாகிகளும், ரசிகர்களும் பெருமளவில் திரண்டு அவருக்கு வரவேற்பளித்தனர்.

ரசிகர்களின் உற்சாக வரவேற்பில் திளைத்த அஸ்வின் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்த உலகக்கோப்பையை வென்றதன்மூலம் என்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது. சிறுவயது முதலே, உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று ஆவல் எனக்கிருந்தது. அது இப்போது நிறைவேறியுள்ளது.

இந்த போட்டியில் விளையாடியபோது சச்சின் அளித்த ஆலோசனைகள் மிகவும் உதவிகரமாக இருந்தது. தோனியின் தலைமையில் கோப்பையை வென்று இந்திய மக்களுக்காக சமர்ப்பிக்கிறோம். 

இவ்வாறு அஸ்வின் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்