முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாக்கரேவை பார்க்கச் சென்ற அமிதாப் - அபிஷேக் காயம்

வியாழக்கிழமை, 15 நவம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

மும்பை, நவ. 16 - உடல்நிலை பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக உள்ள சிவ சேனா தலைவர் பால் தாக்கரேவை பார்க்கச் சென்ற பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தனர்.

சிவ சேனா தலைவர் பால் தாக்கரேவின் உடல் நிலை நேற்று முன்தினம் இரவு மிகவும் மோசமானது. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து அறிந்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது மகன் அபிஷேக் பச்சனை அழைத்துக் கொண்டு மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள தாக்கரேவின் வீடான மதோஸ்ரீக்கு நேற்று முன்தினம் இரவு சென்றார். அப்போது அங்கு தாக்கரேவின் உடல்நிலை குறித்து அறிந்த சிவ சேனா தொண்டர்கள் ஏராளமானோர் கூடியிருந்தனர். காரை விட்டு இறங்கிய அமிதாப் மற்றும் அபிஷேக் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தனர். இது குறித்து அமிதாப் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

ஆமாம், நானும் அபேஷக்கும் பால் தாக்கரேவை பார்க்கச் சென்ற இடத்தில் காயமடைந்தோம். அங்குள்ள மருத்துவர்கள் எங்களுக்கு சிகிச்சை அளித்தனர். தற்போது நலமாக உள்ளோம். கூலி படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு நான் படுகாயமடைந்தபோது தாக்கரே என்னை மருத்துவமனையில் வந்து பார்த்தார். அப்போது அவர் தான் வரைந்த ஒரு கார்ட்டூனை கொடுத்தார். அதில் எமராஜ் தோற்றார் என்பது போன்று வரையப்பட்டிருந்தது. கூலி பட விபத்துக்கு பிறகு நினைவில்லாத நிலையில் பெங்களூரில் இருந்து என்னை மும்பை கொண்டு வந்தபோது அவருடைய ஆம்புலன்சில் தான் என்னை ஏற்றிச் சென்றனர்.

என் மீது போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது அவர் என்னை தொடர்பு கொண்டு, உண்மையைச் சொல்லுங்கள், உங்களுக்கு இதில் தொடர்புள்ளதா என்று கேட்டார். நான் இல்லை என்று கூறியவுடன் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம் நான் உங்களுடன் இருக்கிறேன் என்றார். நீங்கள் ஒரு நடிகர் உங்கள் வேலையைச் செய்யுங்கள் என்றார் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்