முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாவரசு கொலை வழக்கில் தேடப்பட்ட ஜான்டேவிட் சரண்

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.24 - மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஜான்டேவிட் நேற்று கடலூர் மத்திய சிறை அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்தார்.  

சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன்னுச்சாமியின் மகனான நாவரசு சிதம்பரம் முத்தையா மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது 1996-ல் சீனியர் மாணவரான ஜான் டேவிட்டால் படுகொலை செய்யப்பட்டார்.  இந்த கொடூர சம்பவம் தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகே கல்லூரிகளில் ராக்கிங் தடை செய்யப்பட்டது. 

இதையடுத்து நாவரசு கொலை வழக்கை விசாரித்த கடலூர் செசன்ஸ் நீதிமன்றம் ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து ஜான் டேவிட்டின் பெற்றோர் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். சென்னை ஐகோர்ட் அதனை விசாரித்து டேவிட்டுக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி 2001-ம் ஆண்டு அக்டோபரில் அவரை விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து 2002-ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனுச் செய்யப்பட்டது. 

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் பண்டாரி, சர்மா ஆகியோர் ஜான்டேவிட்டை விடுதலை செய்து சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, கடலூர் செசன்ஸ் கோர்ட் அளித்த தீர்ப்பான இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்வதாக உத்திரவிட்டனர். குற்றம் சாட்டப்பட்ட ஜான்டேவிட்டுக்கு எதிராக சூழ்நிலை ஆதாரங்கள் உள்ளன. இருந்தபோதிலும் அவற்றைக் கருத்தில் கண்டு கொள்ளாது ஐகோர்ட் தீர்ப்பளித்திருப்பது அதிருப்தி அளிப்பதாக உள்ளது என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும்  ஜான்டேவிட்டை உடனடியாக கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் முன்பு ஆஜர் படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து ஜான்டேவிட்டை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சி செய்தனர். பெற்றோருடன் அவர் ஆஸ்திரேலியாவில் தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்டது.  ஜான்டேவிட்டும் அவரது பெற்றோரும் போலி பாஸ்போர்ட்டில் தப்பிச் சென்றனரா என்பது குறித்தும் கடலூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஜான்டேவிட் கடலூர் மத்திய சிறை அதிகாரிகள் முன்னிலையில் நேற்று சரணடைந்தார். ஜான்டேவிட் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் போலியான பெயரில் பணிபுரிந்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஜான்டேவிட் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்