முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் இந்தியாவுக் குட்பட்டதே: இந்தியா கடும் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச். 16 - தீவிரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் ஒரு பகுதியே என்று பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய பாராளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கில் தீவிரவாதி அப்சல் குருவின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரிக்கப்பட்டதையொட்டி அவன் தூக்கிலிடப்பட்டான். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் தேசிய அசெம்பிளியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தீவிரவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆதரவு அளிப்பதில் இருந்து பாகிஸ்தான் விலகிக் கொள்ள வேண்டும். தேசிய அசெம்பிளியில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது இந்தியாவின் உள்விவகாரத்தில் தலையிடுவது போலாகும். 

ஜம்மு -  காஷ்மீர் மற்றும் ஆக்கிரமிப்புக்குள்ளான அனைத்து பகுதிகளும் இந்தியாவின் ஒரு பகுதியே என்றும் இந்திய பாராளுமன்ற இரு சபைகளிலும் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த உள்விவகாரங்களில் தலையிட பாகிஸ்தான் முற்பட்டால் அதை தேசம் முழுவதும் ஒருங்கிணைந்து கடுமையாக எதிர்க்கும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தேசிய அசெம்பிளியில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பாராளுமன்றம் முழுமையாக நிராகரிக்கிறது என்று பாராளுமன்ற லோக்சபையில் சபாநாயகர் மீராகுமார் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதை வாசித்தார். 

இந்தியாவின் உள்விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுவதை பாராளுமன்றம் அடியோடு நிராகரிக்கிறது. தீவிரவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆதரவு கொடுக்கும் இந்த மாதிரியான நடவடிக்கைகளில் இருந்து பாகிஸ்தான் முழுமையாக ஒதுங்கிக் கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு எதிராக தங்கள் மண்ணை தீவிரவாதிகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் ஏற்கனவே உறுதியளித்துள்ளது. இதை உறுதியாக பின்பற்றினால்தான் பாகிஸ்தானுடன் அமைதியான உறவுக்கு ஒரு அடிப்படையாக அமையும் என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. 

முன்னதாக பாகிஸ்தான் தேசிய அசெம்பிளியில் அப்சல் குருவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியிருப்பது குறித்து பிரச்சினையை பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் வெளியுறவு துறை அமைச்சருமான யஸ்வந்த்சின்ஹா எழுப்பி பாகிஸ்தான் தேசிய அசெம்பிளி நிறைவேற்றியுள்ள தீர்மானத்திற்கு சரியான பதிலடியை இந்த சபை கொடுக்க வேண்டும் என்றார். ஜம்மு - காஷ்மீர் மாநில மக்களை தூண்டும் வகையில் இந்த தீர்மானத்தை பாகிஸ்தான் நிறைவேற்றியுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலமானது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்றார். 

இதற்கு பதிலளித்து பேசிய பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கமல்நாத் கூறுகையில், பாகிஸ்தான் தேசிய அசெம்பிளியில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதற்கு அரசு கவலையடைந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானத்தை நிறைவேற்றும்படி லோக்சபை சபாநாயகர் மீராகுமாரை கேட்டுக் கொண்டார். ராஜ்யசபையிலும் பாகிஸ்தான் தேசிய அசெம்பிளி தீர்மானத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராஜ்யசபை எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜெட்லி பேசுகையில், 

பாகிஸ்தானுடன் சமாதான நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தியாவின் உள் விவகாரங்களில் பாகிஸ்தானின் தலையீட்டுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாரதீய ஜனதா மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரினர். இந்திய பாராளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் அரசியல்பூர்வமாக அங்கீகாரம் அளித்துள்ளது. இதனால் அந்த நாட்டுடன் உறவு சீரடையாது என்று அவர்கள் ஆவேசமாக கூறினர். 

பாகிஸ்தான் இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவது மட்டுமல்லாது, தீவிரவாதிகளின் தாக்குதலுக்கும் அந்த நாடு இந்த தீர்மானம் மூலம் அங்கீகாரம் அளித்துள்ளது. பாராளுமன்றத்தில் பாகிஸ்தானை கண்டித்து நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது, 

கடந்த 14 ம் தேதி பாகிஸ்தான் தேசிய அசெம்பிளியில் தீவிரவாதி அப்சல் குருவுக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பாராளுமன்றம் அடியோடு நிராகரிக்கிறது. இந்தியாவுக்கு எதிராக தங்கள் மண்ணை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் ஏற்கனவே உறுதியளித்துள்ளது. இந்த உறுதி அடிப்படையில்தான் இரு நாடுகளிடையே அமைதியான சூழ்நிலை ஏற்படும். இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவது இரு சபைகளும் அடியோடு நிராகரிக்கிறது. இந்த மாதிரி தீவிரவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆதரவு அளிப்பதில் இருந்து பாகிஸ்தான் உடனடியாக ஒதுங்கி கொள்ள வேண்டும். 

ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஆக்கிரமிப்புக்கு உள்ளான பகுதிகள் முழுவதும் இந்தியாவின் ஒரு பகுதியே என்று பாராளுமன்றத்தின் இரு சபைகளும் உறுதி செய்கின்றது. இது எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகத்தான் இருக்கும். இந்தியாவின் எந்த பகுதியிலாவது தலையிட்டால் அதற்கு ஒருங்கிணைந்து சரியான பதிலடியை கொடுப்போம். இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்