முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என் சித்தியால் என் உயிருக்கு ஆபத்து: நடிகை அஞ்சலி

திங்கட்கிழமை, 8 ஏப்ரல் 2013      சினிமா
Image Unavailable

 

ஐதராபாத், ஏப்.9 - எனது சித்தியால் என் உயிருக்கு ஆபத்துள்ளது. அதனால் அவர்களுக்கு தெரியாமல் ஐதராபாத்தில் குடியேறிவிட்டேன் என்று நடிகை அஞ்சலி கூறினார். இது பற்றி விபரம் வருமாறு:- கற்றது தமிழ் கதாநாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி. தொடர்ந்து 'அங்காடி தெரு', 'மங்காத்தா', 'எங்கேயும் எப்போதும்', 'கலகலப்பு', 'சேட்டை' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

நேற்று ஐதராபாத்தில் இருந்து நம்மிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அஞ்சலி கூறியதாவது:-

நான் சென்னையில் எனது சித்தி பாரதியுடன் வசித்தேன். அவர் எனது அம்மா என்றே பலரும் நினைத்தனர். ஆனால் அவர் என் அம்மா கிடையாது. சென்னையில் என்னுடன் இருக்கும் குடும்பமும் எனது சொந்த குடும்பம் இல்லை. சித்தி குடும்பத்தினர் என்னோடு தங்கி இருக்கிறார்கள்.

அவர்களுக்காக நான் நிறைய செய்துவிட்டேன். ஆனாலும் எனக்கு தெரியாமலேயே சித்தி எனக்கு எதிராக நிறைய மோசடி வலைகள் பின்னி வைத்துள்ளார். என்னுடைய கோடிக்கணக்கான பணத்தை கையாடல் செய்து விட்டார். சித்திக்கு டைரக்டர் களஞ்சியம் உறுதுணையாக இருக்கிறார். இருவரும் என்னை பணம் கொட்டும் ஏ.டி.எம். மெஷின் போலவே பயன்படுத்தினர். தாங்க முடியாத அளவுக்கு கொடுமையும் இழைத்தார்கள்.

சமீபத்தில் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த படிப்பிடிப்பு ஒன்றில் என்னை மின்சாரம் தாக்கியது. எனக்கு சிகிச்சை அளிக்காமல் வலியோடு மீண்டும் நடிக்க வைத்தார்கள். சித்தி எப்போதும் எனக்கு கேடயம் போலவே இருந்து வெளி உலக தொடர்பு இல்லாமல் பார்த்துக் கொண்டார். என் சொந்த அண்ணன், அக்காவைகூட பார்க்க, பேச அனுமதிக்கவில்லை.

இனிமேலும் இதனை பொறுத்துக்கொள்ள முடியாது. நான் மேஜர் எனவே சொந்தக்காலில் நிற்க முடிவு எடுத்து வீட்டை விட்டு வெளியேறி விட்டேன். சென்னையில் எனது உயிருக்கு சித்தி மற்றும் டைரக்டர் களஞ்சியத்தால் அச்சுறுத்தல் உள்ளது. எனவே ஐதராபாத்தில் குடியேறிவிட்டேன். தற்போது எனக்கு யாரும் துணை இல்லை.

நான் வேறு யாருடனோ ஓடிவிட்டதாக சித்தி அவதூறு செய்தி பரப்பக்கூடும். அதனால்தான் உண்மைகளை உங்களிடம் சொல்கிறேன். சென்னை வந்தால் என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எனவே இப்போதைக்கு அங்கு வரமாட்டேன். என் உடம்பில் சிறு கீறல் விழுந்தாலும் அதற்கு என்னுடைய சித்தியும், இயக்குனர் களஞ்சியமும் தான் பொறுப்பு.

நான் சினிமாவில் இதுவரை சம்பாதித்த பணம் அனைத்தையும் அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். எனக்கென்று எதுவும் இல்லை. தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். எனது உண்மை நிலையை விரைவில் பத்திரிகையாளர்களை சந்தித்து வெளிப்படுத்துவேன்.

இவ்வாறு அஞ்சலி கண்ணீர் விட்டபடி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்