முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை அஞ்சலியை கண்டுபிடிக்ககோரி சித்தி மனு

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஏப். 11 - ஆந்திராவைச் சேர்ந்த நடிகை அஞ்சலி கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அங்காடி தெரு படத்தின் வெற்றி அவரை முன்னணி நடிகையாக உயர்த்தியது. சமீபத்தில் வெளியான சேட்டை படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக முத்தக் காட்சிகளில் நெருக்கமாக நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை அஞ்சலி தன்னை சித்தி பாரதிதேவி கொடுமைபடுத்துவதாக பரபரப்பு புகார் வெளியானது.

அதன் பிறகு கடந்த 8-ந் தேதி ஐதாராபாத்தில் இருந்த நடிகை அஞ்சலி திடீரென மாயமானார். படப்பிடிப்புக்காக சென்றிருந்த அவர் ஓட்டல் அறையில் இருந்து நைசாக வெளியில் சென்று காரில் ஏறி தப்பிச் சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக அஞ்சலியின் அண்ணன் ரவிசங்கர் போலீசில் அளித்த புகாரில், அஞ்சலியை யாரோ கடத்திச் சென்று விட்டனர் என்று கூறியிருந்தார்.

இதற்கிடையே, சென்னையில் உள்ள நிருபர்களை போனில் தொடர்பு கொண்டு பேசிய அஞ்சலி, தனது சித்தி பாரதிதேவி மற்றும் டைரக்டர் களஞ்சியம் மீது பரபரப்பான குற்றச் சாட்டுகளை கூறினார். 2 பேரும் என்னிடம் பணம் பறிக்கும் நோக்கில் செயல் படுகிறார்கள் என்று அவர் கூறியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் இருவரும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனித்தனியாக புகார் மனுக்கள் அளித்துள்ளனர். சித்தி பாரதிதேவி நேற்று முன்தினம் அளித்த புகாரில் அஞ்சலி யாருடைய பிடியிலேயோ இருந்து கொண்டு பேசுகிறார். அவளை யாரோ கடத்தி வைத்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

இதன் காரணமாக கடந்த 4 நாட்களாக அஞ்சலி விவகாரத்தில் பரபரப்பும், குழப்பமும் நிலவி வருகிறது. இதற்கிடையே அஞ்சலியின் அண்ணன் ரவிசங்கர் நேற்று போலீசாரை சந்தித்து, வெளிநாட்டில் இருக்கும் தாய் பார்வதி தேவியுடன் அஞ்சலி போனில் பேசினார். அப்போது யாரும் தன்னை கடத்தவில்லை என்று கூறியிருக்கிறார். எனவே நான் கொடுத்த கடத்தல் புகாரை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். ஆனால் போலீசார் இதனை ஏற்க மறுத்து விட்டனர். அஞ்சலியை நேரில் பார்க்கும் வரை நீங்கள் கொடுத்துள்ள புகார் மீது விசாரணை நடைபெறும் என்று திட்ட வட்டமாக தெரிவித்து விட்டனர்.

இந்த நிலையில் நடிகை அஞ்சலியின் சித்தி பாரதிதேவி சென்னை ஐகோர்ட்டில் நேற்று ஹேபியஸ் கார்பஸ் (ஆட்கொணர்வு) மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நடிகை அஞ்சலி கடந்த 8-ந் தேதி எனக்கு எதிரான சில கருத்துக்களை கூறியதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது. இதை பார்த்த நான் அஞ்சலியை தொடர்பு கொள்ள முயன்ற போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர் சமூக விரோதிகளால் கடத்தி அடைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சுகிறேன். எனவே அவரை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு சென்னை போலீஸ் கமிஷனருக்கும், வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனுவை அவர் சார்பில் வக்கீல் ஜெயபிரகாஷ் தாக்கல் செய்தார். மனு இன்று விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. இதற்கிடையே தெலுங்கு பட உலகின் முன்னணி நடிகர் ஒருவரிடம் தன்னுடைய பிரச்சினைகளை அஞ்சலி மனம் விட்டு பேசியுள்ளார். அப்போது அவர் சினிமா தயாரிப்பாளர் ஒருவரை கைகாட்டி அவரை போய் சந்தித்து பேசினால், உனது பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வை ஏற்படுத்தி தருவார் என்று கூறியிருக்கிறார். இதன் பேரிலேயே அஞ்சலி சினிமா தயாரிப்பாளரிடம் தஞ்சம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே அவரது வழிகாட்டுதலின் பேரில் விரைவில் அஞ்சலி திரை மறைவு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை போலீசாரும் நடிகை அஞ்சலி எங்கே இருக்கிறார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். நடிகை அஞ்சலி தன் மீது கொடுக்கப்பட்டுள்ள கடத்தல் புகாரை முடிவுக்கு கொண்டு வரவும், தன்னைப் பற்றி தினமும் வெளியாகும் தகவல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் போலீசில் சரண் அடைய திட்ட மிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே தமிழகத்திலோ அல்லது ஆந்திராவிலோ உயர் போலீஸ் அதிகாரி முன்பு விரைவில் அவர் ஆஜர் ஆவார் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்