முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: முதல்வர்

வெள்ளிக்கிழமை, 14 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஜூன்.15 - காவிரி மேற்பார்வைக்குழு முறைப்படி அமைக்கப்படவில்லை, அது எந்த முடிவும் எடுக்க முடியாது என்று கூறிய, கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-​

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் இடைக்கால மனு 10.5.2013 அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கர்நாடகம் சார்பில் தற்காலிகமாக ஒரு மேற்பார்வைக் குழு அமைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, உச்ச நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொண்டு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட தற்காலிக மேற்பார்வைக் குழு 12.6.2013 அன்று கூடிய போது, கர்நாடக அரசு இந்தக் குழு முறைப்படி அமைக்கப்படவில்லை என்றும், இந்தக் குழு எந்த முடிவினையும் எடுக்க முடியாது என்றும் தெரிவித்தது.  இதிலிருந்து, கர்நாடகம், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்து இருப்பது தெள்ளத் தெளிவாகிறது. கர்நாடகம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட தற்காலிக மேற்பார்வைக் குழுவிற்கு முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை என்று கூறுவதால், இது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அவமதிக்கும் செயலாகும்.  எனவே, தமிழகத்தின் சார்பில் கர்நாடகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். அதே போன்று, காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதால், அந்த ஆணையின் அடிப்படையில் காவேரி மேலாண்மை வாரியம், காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்ற ஒரு மனுவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். 

எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள்  விவசாயிகளுக்கு திருப்தியையும், மன நிறைவையும் அளிக்கும் என்று நான் நம்புகிறேன். 

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்