முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின் திட்டங்களுக்கு நிதி வழங்க பிரதமருக்கு முதல்வர் கடிதம்

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2013      அரசியல்
Image Unavailable

சென்னை, செப். 17 - 2 மின் திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ. 1500 கோடி வழங்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 

புதுப்பிக்கத்தக்க மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்வதை நீங்கள் அறிவீர்கள். காற்றாலை மூலம் மட்டும் 7,145 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் அடுத்த ஆண்டில் 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை இந்த துறைகளில் உற்பத்தி செய்ய தமிழகம் திட்டமிட்டுள்ளது. 

சூரிய மின்சக்தி திட்டத்தின் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் மூவாயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொண்டு செல்வதற்கு அடிப்படி மற்றும் கட்டுமான வசதிகள் உருவாக்குவதில் பல பின்னடைவுகள் உள்ளன. காற்றாலை மின்சாரம் அவ்வப்போது கிடைக்கக் கூடியது. அதனை வெளியே கொண்டு செல்வதற்கு அதிக செலவாகிறது. காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்து இதை கொண்டு செல்வதற்கு அனல் மின் நிலையத்திற்கு ஆகும் செலவை விட 5 மடங்கு அதிகம் செலவாகிறது. அதே நேரத்தில் காற்றாலை மூலம் உற்பத்தி ஆகும் மின்சாரம் குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்பட்டாலும் அவற்றை கொண்டு செல்வதற்கு போதிய வசதிகள் இல்லாதது பிரச்சினைகளாக உள்ளது. இதன் காரணமாக எனது அரசு ரூ. 5,998 கோடி செலவில் 2 திட்டங்களை தமிழ்நாடு மின் கழகம் மூலம் செயல்படுத்த திட்டம் தீட்டியது. 

இந்த திட்டங்கள் மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையிடம் வழங்கப்பட்டது. இது போன்ற திட்டங்களுக்கு நிதியுதவி செய்ய தேசிய தூய்மை எரிசக்தி நிதி மத்திய அரசு மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய நிதித்துறையின் வழிகாட்டுதலின் படி இது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களுக்கு மத்திய தூய்மை மின் சக்தி நிதியில் இருந்து 40 சதவீதம் உதவி கிடைக்க வேண்டும். அதன்படி ரூ. 1500 கோடி வழங்குவதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கோப்பு உரிய அனுமதிக்காக தற்போது நிதித்துறை செயலாளர் தலைமையில் உள்ள இன்டர் அமைச்சரவை குழு முன்பு வைக்கப்பட்டுள்ளது. 

ஆனால் அந்த அமைப்பு நிதி வழங்குவதற்கு உரிய ஒப்புதல் அளிக்கவில்லை. இது மத்திய அரசின் கொள்கைக்கு எதிராக உள்ளது. தூய்மை புதுப்பிக்க சக்தி மின் திட்டத்தில் முன்னணி மாநிலமாக திகழும் தமிழகத்திற்கு நிதி ஒதுக்க மறுப்பது எங்களுக்கு கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இன்டர் அமைச்சரவை குழு எடுத்த முடிவு நியாயமற்றது. இந்த திட்டங்களுக்கு மத்திய மின் துறை, புதிய புதுப்பிக்கத்தக்க மின்சக்தி துறை, மத்திய திட்ட கமிஷன் ஆகியவை ஒத்துழைப்பு அளித்துள்ள நிலையில் இன்டர் அமைச்சரவை குழு இந்த தவறான முடிவை எடுத்துள்ளது. 

எனவே தாங்கள் உடனடியாக தலையிட்டு மத்திய நிதித்துறையிடம் பேசி தமிழகத்திற்கு ரூ. 1500 கோடி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்