முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல் கொள்முதல் விலை உயர்வு: முதல்வர் அறிவிப்பு

வியாழக்கிழமை, 26 செப்டம்பர் 2013      அரசியல்
Image Unavailable

சென்னை, செப்.27 - விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சாதாரண நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1360-ம், சன்ன ரக நெல்லுக்கு ரூ. 1415-ம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். காவிரி டெல்டா பகுதியில் தேவைக்கேற்ப கொள்முதல் நிலையங்களை திறக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

விலைவாசி ஏற்றத்தால் மக்கள் படும் துன்பங்களை துடைக்கும் வகையில், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் விலையில்லா அரிசி; மானிய விலையில் உணவுப் பொருட்கள்; அம்மா உணவகங்கள்; அம்மா குடிநீர் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் அதே சமயத்தில், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், நெல், கரும்பு போன்ற பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு அறிவிக்கும் போது, அதைவிட கூடுதலான கொள்முதல் விலையை எனது தலைமையிலான அரசு அளித்து வருகிறது. 

நடப்பு காரீப் பருவத்திற்கு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்கான குறைந்த பட்ச ஆதார விலையை மத்திய அரசு அறிவித்துள்ளது.  மத்திய அரசின் இந்த அறிவிப்பின்படி, சாதாரண நெல்லுக்கான விலை குவிண்டால் ஒன்றுக்கு 1,310 ரூபாய் என்றும், சன்னரக நெல்லுக்கான விலை குவிண்டால் ஒன்றுக்கு 1,345 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து, நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் பொருட்டு நேற்று  (26.9.2013) எனது தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்; மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன்; நகராட்சி நிருவாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி; வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் இரா. வைத்திலிங்கம்; வேளாண்மைத் துறை அமைச்சர் செ. தாமோதரன்; கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜு; உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ்; தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன்;  நிதித் துறை முதன்மைச் செயலாளர் ஆர். சண்முகம்; வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் சந்தீப் சக்சேனா; கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைச்செயலாளர் எம்.பி. நிர்மலா, மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விரிவான கலந்தாய்விற்குப் பின்னர், நெல் பயிரிடும் விவசாயிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு, சாதாரண நெல்லுக்கு குவிண்டால் ஒன்றிற்கு மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள 1,310 ரூபாயுடன் கூடுதலாக தமிழக அரசின் சார்பில் 50 ரூபாய் வழங்கவும், சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றிற்கு மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள 1,345 ரூபாயுடன் கூடுதலாக தமிழக அரசின் சார்பில் 70 ரூபாய் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  இதன்படி, சாதாரண நெல்லுக்கு குவிண்டால் ஒன்றிற்கு 1,360 ரூபாயும், சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றிற்கு 1,415 ரூபாயும் வழங்கப்படும். 

மேலும், நெல் விளையும் பூமியான காவேரி பாசனப் பகுதிகளில், தேவைக்கேற்ப நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு அனுமதி வழங்குமாறு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.  

காவேரிப் பாசனப் பகுதி அல்லாத இடங்களில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அனுமதி வழங்குமாறும் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். 

தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதோடு அவர்களின் வாழ்வில் மேலும் ஏற்றத்தை அளிக்கவும் வழிவகுக்கும்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்