முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் பிப்ரவரி மாதம் மோடி பங்கேற்கும் கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச. 18 - பிப்ரவரி மாதம் மோடி பங்கேற்கும் பிரசார கூட்டம் சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற தேர்தலில் தமிழக பா.ஜனதா கட்சி கூட்டணியில் முக்கிய கட்சிகளை சேர்க்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சமீபத்தில் டெல்லி சென்று பா.ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங்கை சந்தித்தார். இதையடுத்து, தமிழக பா.ஜனதாவுடன் ம.தி.மு.க. கூட்டணி அமைப்பது உறுதியாகிவிட்டது.

பா.ம.க.வையும் பா.ஜனதா கூட்டணியில் சேர்க்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. பா.ஜனதா தேசிய செயலாளர் முரளிதர் ராவ், மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அன்புமணியை தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இது குறித்து டாக்டர். ராமதாசிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் டெல்லி சென்று ராஜ்நாத்சிங் மற்றும் பா.ஜனதா மூத்த தலைவர்களை சந்திக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழருவி மணியன் தே.மு.தி.க.வை பா.ஜனதா கூட்டணியில் சேர்க்க தீவிர முயற்சி செய்து வருகிறார். எனவே அடுத்த மாதத்துக்குள் தமிழக பா.ஜனதா கூட்டணியில் சேரும் கட்சிகள் குறித்து முடிவு செய்யப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த கூட்டணி உறுதியானதும் பா.ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் அடுத்த மாதம் சென்னை வந்து கூட்டணி கட்சி தலைவர்களை சந்திப்பார் என்று பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

கூட்டணி பற்றி அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியானதும், சென்னையில் பிப்ரவரி மாதம் பா.ஜனதா கூட்டணி சார்பில் பிரமாண்ட பிரசார கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இதில், பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசுகிறார். கூட்டணி கட்சி தலைவர்களும் இதே மேடையில் பேச ஏற்பாடு செய்யப்படுவதாக தமிழக பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்