முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு முதல்வர் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 3 ஜனவரி 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.4 - முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு "விஷம் போல் ஏறும் விலைவாசி" வரலாறு காணாத பணவீக்கம்"" ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதைத் தலையாய பணியாகக் கொண்டிருக்க வேண்டிய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, அதற்கு முற்றிலும் முரணான வகையில், விலைவாசியை உயர்த்த வழிவகுக்கும் பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றின் விலையை அடிக்கடி உயர்த்திக் கொண்டே செல்வது """"வேலியே பயிரை மேய்வது"" என்ற பழமொழிக்கேற்ப அமைந்துள்ளது. 

1.12.2013 முதல் டீசல் விலையை லிட்டருக்கு 50 காசு எனவும்; 10.12.2013 முதல் சமையல் எரிவாயு உருளையின் விலையை 3 ரூபாய் 46 காசு எனவும்; 20.12.2013 முதல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 41 காசு எனவும்; டீசலுக்கான விநியோகத் தொகையை லிட்டருக்கு 10 காசு எனவும்; 1.1.2014 முதல் மானியமில்லாத சமையல் எரிவாயுவின் உருளையை 220 ரூபாய் எனவும் உயர்த்தி, மக்களை தாங்க முடியாத சுமைக்கு ஆளாக்கிய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, எப்போதும் போல், சர்வதேசச் சந்தையில் பெட்ரோல் விலை உயர்வு, சர்வதேசப் பொருளாதார நிலை மற்றும் இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி ஆகியவற்றைச் சுட்டிக் காட்டி, இன்று (3.1.2014) நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 75 காசு எனவும், எண்ணெய் நிறுவனங்களுக்கு மாதாமாதம் டீசல் விலையை உயர்த்துவதற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் டீசல் விலையை லிட்டருக்கு 50 காசு எனவும் உயர்த்தியிருக்கிறது. இந்தியாவிலேயே இதுவரை நடந்திராத அளவுக்கு, கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் ஐந்தாவது முறையாக பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கை, ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிப்பதற்கு சமமாகும். 

சுதந்திர இந்தியாவில் இதுவரை எந்த மத்திய அரசும் செய்திராத அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அடிக்கடி உயர்த்தி விலைவாசி உயர்விற்கு வழிவகுத்த ‘பெருமை’ ஒன்பதரை ஆண்டு கால மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசையே சாரும். 

டீசல் என்பது நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான உயிர்நாடி. டீசல் விலை உயர்வு என்பது அனைத்து பொருட்களின் விலையுடன் பின்னிப் பிணைந்துள்ளது. 

இதே போன்று பெட்ரோலும் சாதாரண ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தக் கூடிய ஒன்றாகும். தற்போது உயர்த்தப்பட்டுள்ள டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு காரணமாக, தனியார் வாகனங்களில் பயணிக்கும் மாணவ, மாணவியர்; அலுவலகங்களுக்குச் செல்வோர்; சுற்றுலாப் பயணிகள்; இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தும் ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோர் கூடுதல் சுமைக்கு ஆளாக்கப்படுவார்கள். பாசனத்திற்காக டீசல் பம்ப் செட்டுகளை பயன்படுத்தும் விவசாயிகளும், தொழில் முனைவோர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். இது தவிர, சரக்கு போக்குவரத்துச் செலவு அதிகரிப்பதால் காய்கறிகள், பழங்கள் உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் உயர்த்த இந்த டீசல் விலை உயர்வு வழி வகுக்கும். இவற்றிற்கெல்லாம் மேலாக, குறைந்த கட்டணத்தில் மக்களை ஏற்றிச் செல்லும் அரசுப் பேருந்துகளுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டு, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கடுமையான நிதிப் பற்றாக்குறையினைச் சந்திக்க நேரிடும். 

மத்திய அரசு டீசல் விலையை அடிக்கடி உயர்த்திக் கொண்டே செல்வதன் காரணமாக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பாதிக்கப்படும் என்றாலும், மக்கள் நலன் கருதி பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவதில்லை என்ற திடமான முடிவுடன் எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. 

வெளிநாட்டுச் சந்தையில் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்ந்துவிட்டது என்று சொல்லி உள்நாட்டிலேயே கிடைக்கின்ற எண்ணெய்க்கும் அதே விலை நிர்ணயம் செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இந்திய நாட்டில் உள்ள எண்ணெய் வளங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். நான் ஏற்கெனவே பல முறை சுட்டிக் காட்டியபடி பெட்ரோலியப் பொருள்களின் விலை நிர்ணயக் கொள்கையில் உடனடி மாற்றத்தை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டு வர வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் அடிக்கடி பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்படுவது தவிர்க்கப்படும். 

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குள் ஐந்து முறை என்ற அளவுக்கு பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை மத்திய அரசு உயர்த்துவது என்பது பொருளாதார மேம்பாட்டை சீரழிக்கின்ற ஒரு பிற்போக்கு நடவடிக்கை ஆகும். மத்திய அரசின் இந்த மக்கள் விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

ஏற்கெனவே பல்வேறு சோதனைகளால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் பொதுமக்கள் மேலும் துன்பப்படாமல் இருக்க ஏதுவாக, இந்த விலை உயர்வையும், எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட விலை நிர்ணய அதிகாரத்தையும் மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். 

""""செவிடன் காதில் ஊதிய சங்கு"" என்ற பழமொழிக்கேற்ப மத்திய அரசு நடந்து கொள்ளுமேயானால், தங்களின் மனக் கொதிப்பினையும், உள்ளக் குமுறல்களையும் மக்கள் வருகின்ற மக்களவைத் தேர்தலில் நிச்சயம் வெளிப்படுத்துவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்