முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனா-பாகிஸ்தான் உறவு: ஏ.கே. அந்தோணி கவலை

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,மே.22 - சீனா - பாகிஸ்தான் இடையே வளர்ந்து வரும் பாதுகாப்பு துறை சார்ந்த உறவுகள் இந்தியாவுக்கு கவலை அளிப்பதாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறியுள்ளார். புது டெல்லியில் நடைபெற்ற பாதுகாப்பு படை உயர் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, 

சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பாதுகாப்பு துறை உறவு வளர்ந்து வருகிறது. இது இந்தியாவுக்கு கவலையளிக்க கூடிய விஷயமாகும். இந்த நிலைமையினால் நாமும் நம்முடைய பாதுகாப்பு திறனை வளர்த்து கொள்ள வேண்டியதுள்ளது. அப்படி செய்வதுதான் ஒரே வழி. சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள புதிய ராணுவ ஒப்பந்தப்படி இரு நாடுகளும் இணைந்து உருவாக்க உள்ள ஜே.எப். தண்டர் ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் 50 போர் விமானங்கள் அளிக்கப்பட்டுள்ளன. 

பின்லேடன் பாகிஸ்தானில் இருந்ததும், அங்கு அவர் கொல்லப்பட்டதும் இந்த பிரதேசத்தை பாதிக்கக் கூடிய விஷயமாகும். இந்தியாவையும் இது பாதிக்கும். பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான மறைவிடங்கள் இருப்பது நமக்கு கவலையளிக்கும் விஷயமாகும். அவை கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட வேண்டும். பாகிஸ்தான் அவ்வாறு செய்தால்தான் இந்தியாவுடனான உறவு மேம்படுத்தப்படும் என்றார். 

அமெரிக்க அதிரடிப் படை பாகிஸ்தானுக்குள் நுழைந்து பின்லேடனின் மறைவிடத்தை தாக்கி கொன்றது போல இந்தியாவாலும் செய்ய இயலும் என இந்திய ராணுவ தளபதி ஜெனரல் வி.கே. சிங் மற்றும் விமானப்படை தளபதி பி.வி. நாயக் ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர். இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, 

பாதுகாப்பு உயரதிகாரிகள் கூறிய அந்த கருத்தை பற்றி பிரதமர் ஏற்கனவே கருத்து கூறி விட்டார். இந்த நிலையில் நான் எதுவும் இது பற்றி சொல்வதற்கில்லை. ஆனால் இந்தியா இது போன்ற அதிரடி தாக்குதல்களை நடத்தாது. இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தற்போது உள்ள நிலைமை குறித்து அமைச்சரிடம் கேட்ட போது, முன்பிருந்ததை விட இப்போது வன்முறை குறைந்துள்ளது. அவ்வப்போது ஊடுருவல் முயற்சி நடந்து வருகிறது. அதே போல சண்டை நிறுத்த உடன்படிக்கை அவ்வப்போது மீறப்பட்டு வருகிறது என்றார். 

சி - 17 ரக அமெரிக்க விமானங்களை வாங்குவது முடிவாகி விட்டதா என்று கேட்ட போது, பாதுகாப்பு விவகார அமைச்சரவை குழு அதை பற்றி ஆய்வு செய்து வருகிறது. இதற்காக எந்த காலக்கெடுவும் தீர்மானிக்கப்படவில்லை என்று அந்தோணி கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்