முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தயாநிதி மாறனும் முறைகேடு: ரூ.700 கோடி கைமாறியது

சனிக்கிழமை, 28 மே 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,மே.- 29 - ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் இதன் மூலம் ரூ. 700 கோடி கைமாறியதாகவும் தெகல்கா இணையதளம் தெரிவித்துள்ளது. இதுபற்றி அவரிடம் சி.பி.ஐ. விரைவில் விசாரணை நடத்தவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரூ.1.76 லட்சம் கோடி இழப்பை நாட்டுக்கு ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல் தொடர்பாக முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆர்.ராசா மற்றும் அவரது உதவியாளர்கள் முதலில் கைது செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து 5 நிறுவன அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜாமீனில் விடுதலை அடைவதற்கு தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஆனால் தொடர்ந்து அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி கைமாறிய விவகாரம் அம்பலமானது. அது தொடர்பாக கருணாநிதி மகள் கனிமொழியிடமும் கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாளிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இதையடுத்து கனிமொழி கைது செய்யப்பட்டு அவரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனு மீதான தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டு நாளை(திங்கள்கிழமை) அளிக்க இருக்கிறது. இதுவரை இந்த வழக்கில்  மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக 2004 முதல் 2007 வரை மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறனும் முறைகேட்டில் ஈடுபட்டதாக தெகல்கா இணையதளம் தற்போது திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ரூ.22 ஆயிரம் கோடி மதிப்பிலான அலைவரிசையை தயாநிதி மாறன் ரூ. ஆயிரத்து 400 கோடிக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்ததாகவும் இதன் காரணமாக அவருக்கு ரூ.700 கோடி கைமாறியதாகவும் தெகல்கா இணையதளம் தெரிவித்துள்ளது. இதுபற்றி விரைவில் சி.பி.ஐ. விசாரணை நடத்திவிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் பிரதமரின் ஆலோசனைகளை ராசா புறக்கணித்தார். சட்டம் மற்றும் நிதி அமைச்சகங்களின் ஆலோசனைகளையும் ராசா புறக்கணித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதேபோல் தயாநிதிமாறனும் பிரதமரின் ஆலோசனைக்குழுவை புறக்கணித்ததாகவும் தெகல்கா இணையதளம் கூறுகிறது. மேலும் அலைவரிசை ஒதுக்கீட்டில் அவர் முறைகேடு செய்ததற்கு வலுவான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சி.பி.ஐ. விசாரித்த பிறகு இந்த விவகாரத்தில் பல பூதாகரமான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்