முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராம்தேவின் 9 நாள் உண்ணாவிரதம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது

திங்கட்கிழமை, 13 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

டேராடூன்,ஜூன்.- 13 - யோகா குரு என அழைக்கப்படும் பாபா ராம்தேவின் 9 நாள் உண்ணாவிரதம் நேற்று முடிவுக்கு வந்தது. அவரது உடல்நிலை தற்போது ஸ்திரமாக இருப்பதாகவும், இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்தனர். நாட்டில் பெருகி வரும் ஊழலுக்கு எதிராகவும், கறுப்பு பணத்தை வெளிக்கொணர வேண்டும் என்று வலியுறுத்தியும் பாபா ராம்தேவ் தலைநகர் டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். ஆனால் அவரது போராட்டத்தின் போது டெல்லியில் தடியடி நடத்தப்பட்டது. இந்த வரலாற்று தவறை வரலாறு மன்னிக்காது என்று யோகா குரு ராம்தேவ் சாபமிட்டார். பிறகு ஹரித்துவாரில் உள்ள தனது ஆசிரமத்தில் அவர் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
திடீரென்று அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து டேராடூனில் உள்ள ஹிமாலயன் மருத்துவ விஞ்ஞான மையத்தில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வது நல்லது என்று டாக்டர்கள் அறிவுரை கூறினார்கள். இந்த நிலையில்தான் ஆன்மீக தலைவர்களில் ஒருவரான ஸ்ரீஸ்ரீரவிசங்கர் யோகா குருவை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத்தினார். ஆனால் ராம்தேவ் அதற்கு செவிசாய்க்கவில்லை. இருப்பினும் ரவிசங்கர் தனது முயற்சியை கைவிடவில்லை.
நேற்று மூன்றாவது நாளாக ராம்தேவை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத்தவே அவரும் அதை ஏற்றுக் கொண்டு உண்ணாவிரதத்தை கைவிட்டார். இதன் மூலம் ராம்தேவின் 9 நாள் உண்ணாவிரதம் நேற்று ஒருவழியாக முடிவுக்கு வந்தது. ராம்தேவ் பழரசம் அருந்தி தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக ரவிசங்கர் பிறகு தெரிவித்தார். பல்வேறு மத தலைவர்கள் மற்றும் ஆன்மீக தலைவர்கள் முன்னிலையில் ராம்தேவ் தனது உண்ணாவிரதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவரது உடல்நிலை தற்போது ஸ்திரமாக உள்ளது. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து அந்த மருத்துவமனையின் இயக்குனர் விஜய் தஸ்மானா கூறுகையில், இந்த ஆஸ்பத்திரிக்கு வந்து ராம்தேவ் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதற்கு உதவிய ஒவ்வொருவருக்கும் என் நன்றி என்று உணர்ச்சிப்பூர்வமாக கூறினார். ராம்தேவின் உடல்நிலை இன்றே டிஸ்சார்ஜ் செய்யும் அளவில் இல்லை. அவர் இன்னும் 2 அல்லது 3 நாட்கள் மருத்துவமனையில் இருப்பார். அதன் பிறகே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று விஜய் தஸ்மானா தெரிவித்தார்.
இதற்கிடையில் ராம்தேவின் முடிவை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. இது ஒரு நல்ல செய்தி என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் துவிவேதி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்