முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமச்சீர் கல்வி விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று தமிழக அரசு அப்பீல்?

திங்கட்கிழமை, 13 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

புது டெல்லி,ஜூன்- .13 - சமச்சீர் கல்வி திட்டம் தொடர்பாக சென்னை ஐகோர்ட் பிறப்பித்த இடைக்கால தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட இருந்தது. இதற்காக பாடப்புத்தகங்களும் அச்சிடப்பட்டன. ஆனால் சமச்சீர் பாடத் திட்டம் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு போதுமானதாக இல்லை என்று கூறி இந்த ஆண்டு பழைய பாடத் திட்டமே பின்பற்றப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற அ.தி.மு.க அரசு அறிவித்தது.
சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைத்து சட்ட திருத்தமும் கொண்டு வரப்பட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சட்ட திருத்தத்திற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது. மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறையே தொடர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களில் தேவையான பக்கங்களை நீக்கவோ, சேர்க்கவோ தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. இந்த வழக்கில் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் சி.வி. சண்முகம், தமிழக அரசின் தலைமை செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, பள்ளி கல்வி துறை செயலாளர் சபிதா ஆகியோர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் சி.வி. சண்முகம், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன், தமிழக அரசு வழக்கறிஞர்கள் ஆகியோர் டெல்லி சென்றனர்.
சாணக்கியபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் டெல்லி வழக்கறிஞர்கள் குருகிருஷ்ணகுமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோருடன் முதல் கட்ட ஆலோசனையில் அமைச்சர் சி.வி. சண்முகம் ஈடுபட்டார். அதன்பிறகு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்தார். பிறகு அமைச்சர் கூறும் போது, சமச்சீர் கல்வி விவகாரத்தில் தமிழக அரசின் சட்ட திருத்தத்திற்கு ஐகோர்ட் விதித்த தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அது குறித்து டெல்லியில் சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சுப்ரீம் கோர்ட்டில் இன்று மேல்முறையீடு செய்யப்படலாம் என்றும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்