முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழி ஜாமீன் மனு மீது விசாரணை ஒத்திவைப்பு

திங்கட்கிழமை, 13 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.14 - கனிமொழி ஜாமீன் மனுவை சுப்ரீம்கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். சி.பி.ஐ. க்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர். கலைஞர் டி.வி.க்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படும் ரூ.214 கோடி எங்கே என்றும் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். 

ரூ.1.76 கோடி லட்சம் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணத்தில் ரூ.214 கோடி கலைஞர் டி.வி.க்கு கைமாறியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் கருணாநிதி மகள் கனிமொழி எம்.பி.யும் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழியும் சரத்குமாரும் முதலில் டெல்லியில் உள்ள பாட்டியாலா சி.பி.ஐ.கோர்ட்டில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். அவர்களது மனுவை விசாரித்த சி.பி.ஐ.கோர்ட்டு நீதிபதி ஓ.பி.ஷைனி,கடந்த மே மாதம் கனிமொழிக்கும் சரத்குமாருக்கும் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதனையொட்டி டெல்லி ஐகோர்ட்டில் அவர்கள் இருவரும் சார்பாக ஜாமீன்கோரி அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீது பலமுறை விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் இறுதியில் கனிமொழிக்கும் சரத்குமாருக்கும் ஜாமீன் கொடுக்க டெல்லி ஐகோர்ட்டும் கடந்த 8-ம் தேதி  மறுத்துவிட்டது. கனிமொழிக்கும் சரத்குமாருக்கும் 2ஜி ஸ்பெக்டரம் ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. கனிமொழிக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிறது. ஜாமீன் கொடுத்தால் சாட்சிகளை மாற்றி சொல்ல வைக்க முடியும் என்பதோடு ஆதாரங்களையும் அழிக்க வாய்ப்பு உள்ளது அதனால் கனிமொழிக்கும் சரத்குமாருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று டெல்லி ஐகோர்ட் அறிவித்தது. இதையும் எதிர்த்து கனிமொழி மற்றும் சரத்குமார் சார்பாக சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்யப்படும் என்று தி.மு.க. அறிவித்தது. அதன்படி நேற்று சுப்ரீம்கோர்ட்டில் கனிமொழி மற்றும் சரத்குமார் சார்பாக ஜாமீன்கோரி அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் பி.எஸ். செளகான், ஸ்வதேந்தர் குமார் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அதோடு மட்டுமல்லாது சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணத்தில் கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி கைமாறியதாக கூறப்படுவதின் தற்போதைய நிலை என்ன? அந்த பணம் தற்போது அந்த பணம் தற்போது எங்கே இருக்கிறது. அந்த பணம் மீட்கப்பட்டுவிட்டதா அல்லது இல்லை என்ற விபரத்தை  இன்னும் மூன்று நாட்களுக்குள் கோர்ட்டில் பதில் அளிக்க வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் கூறபட்டுள்ளது. கலைஞர் டி.வி.க்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படும் ரூ.214 கோடி தற்போது கரீம் மொரானி கம்பெனியில் இருப்பதாக தெரிகிறது.  மேலும் ஊழல் என்பது மிகவும் மோசமான மனி உரிமை மீறலாகும் என்றும் நீதிபதிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர். அதனால் தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா மத்திய தொலை தொடர்புத்துறையாக இருந்தபோது 2ஜி ஸ்பெக்டரம் ஏலம் விடப்பட்டதில் மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு எவ்வளவு என்பதை மதிப்பீடு செய்து கோர்ட்டில் சமர்ப்பிக்கும்படியும் சி.பி.ஐ.க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் விசாரணை எந்தநிலையில் இருக்கிறது என்பது குறித்து சி.பி.ஐ.கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் கனிமொழி மற்றும் சரத்குமார் ஜாமீன் மனுக்கள் தொடர்பாக 3 நாட்களுக்குள் சி.பி.ஐ. பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். 

2ஜி ஸ்பெக்டரம் ஊழலில் ஆதாயம் அடைந்த கம்பெனிகள் மூலமாக கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி ரூபாய் கைமாறியுள்ளது என்று சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது. மேலும் கலைஞர் டி.வி.யில் கனிமொழிக்கும் சரத்குமாருக்கும் தலா 20 சதவீத பங்குகள் உள்ளன. மேலும் சரத்குமாரோடு சேர்ந்து கனிமொழியும் கலைஞர் டி.வி.யை இயக்குவதில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர். இதனையொட்டி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கனிமொழியும் சரத்குமாரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். கனிமொழிக்கும் சரத்குமாருக்கும் சுப்ரீம்கோர்ட்டும் ஜாமீன் வழங்காது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்திருப்பதாக தெரிகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ.1.76 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய கணக்கு மற்றும் தணிக்கை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த ஊழல் வழக்கில் 3-வது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ.விரைவில் சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் குற்றவாளியாக சேர்க்கப்படுவார் என்று உறுதியாக தெரிகிறது. மொரானி கம்பெனியில் இருக்கும் ரூ.214 கோடியை சுப்ரீம்கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்யலாம் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்