முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கிய தி.மு.க. கவுன்சிலருக்கு சிறை

வியாழக்கிழமை, 16 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

திண்டுக்கல், ஜூன்.16 - திண்டுக்கல்லில் ரேஷன் அரிசி மூடைகளை பதுக்கிய தி.மு.க. கவுன்சிலரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து ரேஷன் அரிசி மூடைகள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு வரும் இவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவாரா? என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ற தி.மு.க. ஆட்சியில் ரேஷன் கடைகளில் இருந்து அரிசி மூடைகளை தி.மு.க.வினர் கடத்தி வெளிமாநிலங்களுக்கு சப்ளை செய்து வந்தனர். இதனால் நியாயமாக கிடைக்க பொதுமக்களுக்கு வேண்டிய ரேஷன் அரிசி கிடைக்காமல் போனது. மேலும் இத்திட்டமும் தோல்வி அடைந்தது. தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் முதல்வர் ஜெயலலிதா பொது வினியோகத் திட்டத்தின் மூலம் வழங்கக்கூடிய ரேஷன் அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்திருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள குடிமைப்பொருள் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் ரேஷன் அரிசி மூடைகள் கடத்தப்படுகிறதா? எனவும் ரகசியமாக தீவிர சோதனைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

திண்டுக்கல் நகர் 16வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் வைகை சித்திக் என்ற சித்திக்(51). இவருக்கு சொந்தமான கரூர் ரோட்டில் உள்ள நந்தவனப்பட்டி  ரைஸ் மில்லில் ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் நேற்றுமுன்தினம் இரவு திடீரென ரைஸ்மில்லில் சோதனையிட்டனர். அப்போது 50 கிலோ எடை கொண்ட 40 ரேஷன் அரிசி மூடைகள் இருந்தது தெரியவரவே அவர் மீது வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல் ஜே.எம்.3 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் (பொறுப்பு) கார்த்திகா அவரை 15 நாள் சிறைக்காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

உடனே வைகை சித்திக் தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் படுத்துக் கொண்டார். அவரை சோதனை செய்த டாக்டர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் வைகை சித்திக் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டு அரசியல் செல்வாக்கின் காரணமாக விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து இதுபோன்று கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு வரும் வைகை சித்திக்கை குண்டர் சட்டத்தின் கீழ் அடைப்பதற்கு போலீசார் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்