முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் மசோதா குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் ஜூலை 3-ம் தேதி நடக்கிறது

வியாழக்கிழமை, 23 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜூன் - 23 - லோக்பால் மசோதா குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்டறிய வருகிற ஜூலை 3 ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதா ஒன்றை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த மசோதாவிற்கான வரைவு நகலை தயாரிப்பதற்காக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் 10 பேர் கொண்ட கூட்டுக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசு பிரதிநிதிகளும்,  அன்னா ஹசாரே போன்ற சமூக ஆர்வலர்களும் இடம்பெற்றுள்ளனர். கடந்த சில மாதங்களில் இந்த கூட்டுக்குழு 9 முறை கூடியிருக்கிறது. ஆனால் இந்த 9 கூட்டங்களிலும் இந்த மசோதா குறித்து ஒருமித்த கருத்து எதுவும் ஏற்படவில்லை. இந்த லோக்பால் சட்ட வரம்பிற்குள் பிரதமர், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஆகியோரை உட்படுத்த வேண்டும் என்றும், பாராளுமன்றத்தில் எம்.பி.க்களின் நடத்தையையும் இந்த சட்ட வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இதற்கு மத்திய அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் நடந்த கூட்டுக் குழுவின் இறுதிக் கூட்டத்தில் எந்தவிதமான ஒருமித்த கருத்தொற்றுமையும் ஏற்படவில்லை. இதனால் இந்த கூட்டம் தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் அரசு பிரதிநிதிகள் சார்பில் தயாரிகப்பட்ட வரைவு நகலையும், சமூக ஆர்வலர்கள் தரப்பில் தயாரிக்கப்பட்ட மற்றொரு வரைவு நகலையும் அரசியல் கட்சிகளின் பார்வைக்கு அனுப்பி அந்த கட்சிகளின் கருத்துக்களை கேட்டறிய அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த அனைத்துக் கட்சி கூட்டம் வருகிற ஜூலை 3 ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்