முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோமாலியாவில் உணவின்றி தினமும் 6 பேர் மடியும் பரிதாபம்

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

நைரோபி,ஜூலை.22 - ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் 1992 ம் ஆண்டு கடும் வறட்சி நிலவியது. அப்போது பல்லாயிரக்கணக்கானோர் பட்டினியால் செத்தனர். ஐ.நா. சபை, மேலை நாடுகளின் உதவியால் நிலைமை சீரடைந்தது. இந்த நிலையில் இப்போது மீண்டும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் மக்கள் உணவு கிடைக்காமல் பட்டினி கிடக்கின்றனர். ஒரு கோடியே 13 லட்சம் பேர் பட்டினி கிடப்பதாக ஐ.நா. சபை தகவல் தெரிவித்துள்ளது. 

சோமாலியா நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஏதும் இல்லை. கடந்த 1990 ம் ஆண்டு அங்கு அரசு கவிழ்ந்தது. அதன் பிறகு எந்த ஆட்சியும் இல்லை. நாட்டின் பெரும் பகுதியை தீவிரவாத அமைப்புகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. அவர்கள் வெளிநாட்டு உதவிகளை ஏற்க மறுக்கிறார்கள். அதை மீறி தொண்டு நிறுவனங்கள் உணவு போன்றவற்றை கொடுத்து உதவி செய்தால் தொண்டு நிறுவன ஊழியர்களை சுட்டுக் கொல்கிறார்கள். 

எனவே ஐ.நா. சபை உள்ளிட்ட எந்த தொண்டு நிறுவனங்களும் அவர்களுக்கு உணவு வழங்க முடியவில்லை. இதனால் வறட்சியால் பாதித்து மக்கள் பட்டினி கிடக்கிறார்கள். தினமும் 6 பேர் பட்டினியால் இறக்கின்றனர். அதில் பாதி பேர் குழந்தைகளாக உள்ளனர். 

வறட்சி தாங்க முடியாமல் பெரும்பாலான மக்கள் பக்கத்து நாடான எத்தியோப்பியாவுக்கு அகதிகளாக குடிபெயர்ந்து வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் விலைவாசி 270 சதவீதம் உயர்ந்துள்ளது. அங்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 90 சதவீத கால்நடைகள் வறட்சியால் இறந்து விட்டன. நிலைமை இப்படியே சென்றால் பல்லாயிரக்கணக்கானோர் சாவை சந்திப்பார்கள் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சோமாலியாவுக்கு உதவ உடனடியாக 2500 கோடி ரூபாய் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் என்றும் ஐ.நா. சபை கேட்டு கொண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்