முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் பலத்த மழை போக்குவரத்து கடும் பாதிப்பு

செவ்வாய்க்கிழமை, 30 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

மும்பை, ஆக.- 30 - மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடிய விடிய பெய்த கனமழையால் நேற்று மும்பை மாநகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. இதனால் ரயில் உள்பட மாநகரின் அனைத்து போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.  மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் தொடங்கிய மழை இரவு முழுவதும் பெய்துகொண்டே இருந்தது. நேற்று காலை வரை இந்த மழை தொடர்ந்தது. இந்த கனமழையின் காரணமாக சியாங், குர்லா பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதேபோல நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ரயில் தண்டவாளங்கள் சில இடங்களில் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் சென்ட்ரல் - ஹார்பர் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் அன்றாடம் ரயிலில் பயணம் செய்வோரும், அலுவலகங்களுக்கு செல்வோரும் அவதிக்கு உள்ளாயினர். நகரின் பெரும்பாலான வீதிகளில் வாகனப் போக்குவரத்து முடங்கியுள்ளது. சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்கும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் இடையே ரயில் போக்குவரத்து தடைப்பட்டது. என்றாலும் மும்பை மேற்கு பகுதியில் புறநகர் ரயில்கள் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தாமதத்துடன் சென்று வருகின்றன. தண்டவாளங்கள் மீது தேங்கியுள்ள வெள்ள நீர் வடிந்த பிறகுதான் சென்ட்ரல் -ஹார்பர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புறநகர் பகுதிகளான பரேல், ஹிண்டுமதா, தாதர், மிலன், அந்தேரி, சாந்தாகுரூஸ் விமான நிலையம், குர்லா, காட்கோபர், வில்லிபார்க்லி பகுதிகளில் வெள்ளம் பெருமளவு சூழ்ந்துள்ளது. விமான நிலையத்தின் ஓடுபாதைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால், விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்துவருவதால் மும்பை மக்கள் வீடுகளுக்குள்ளேயே தஞ்சமடைந்துள்ளனர். கடைதெருக்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மொத்தத்தில் மும்பை மாநகர மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்