முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெறவேண்டும்-வைகோஅறிக்கை

சனிக்கிழமை, 17 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, செப்.- 17 - பெட்ரோல் விலை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வை.கே. வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வை.கோ  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை பதினோருமுறை பெட்ரோலியப் பொருட்கள் விலையை உயர்த்தி இருக்கிறது.  தற்போது பெட்ரோல் விலையை மீண்டும் ரூ.3.14 உயர்த்தி இருக்கிறது. பண வீக்கம் கட்டுப்படுத்த முடியாமல் விலைவாசி உயர்ந்துகொண்டிருக்கிற சூழலில் பெட்ரோல் விலையை உயர்த்துவதால் மக்கள் கடுமையான பாதிப்பிற்கு ஆளாவார்கள். 2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்ற போது, பெட்ரோல் விலை ரூ.37.84 ஆக இருந்தது. ஏழு ஆண்டுக் காலத்தில் தற்போது பெட்ரோல் விலை சுமார் நூறு சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. இந்த விலை உயர்வுக்கு சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையைக் காரணம் காட்டும் மத்திய அரசு, கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது அதற்கேற்ப பெட்ரோல் விலையைக் குறைக்க முன்வரவில்லை.
2010 ஜூனில் இருந்து பெட்ரோல் விலையைத் தங்கள் விருப்பப்படி உயர்த்திக்கொள்ள, எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அரசின் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுவிட்டதால், மக்கள் நலனைப்பற்றி கவலைப்படாமல், இலாபம் குவிப்பது ஒன்றே குறிக்கோளாகக்கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அவலநிலை தொடர்கிறது. எண்ணெய் நிறுவனங்கள் நட்டம் அடைவதாக மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது.
ஏனெனில், கடந்த பட்ஜெட்டில் மட்டும், எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூபாய் 4 இலட்சத்து 37 ஆயிரம் கோடி வரிச்சலுகை அளித்ததை மத்திய அரசு மறுக்க முடியாது. மத்திய அரசின் தவறான பொருளாதாரக்கொள்கைகளினால் பணவீக்கத்தையும், விலை வாசியையும் கட்டுப்படுத்த முடியாத நிலைமை உருவாகிவிட்டது. ஆகவே, நியாயப்படுத்த முடியாத, மக்களை பாதிக்கும் பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்