முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ள பட்டாசு தொழிற்சாலை: உ.பி.யில் 6 பேர் கைது

செவ்வாய்க்கிழமை, 18 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

அலாகாபாத், அக்.18 - உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமான பட்டாசு தொழிற்சாலை ஒன்றை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் அலாகாபாத் நகரில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் பட்டாசு தொழிற்சாலை ஒன்று சட்டவிரோதமாக இயங்கி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலை அறிந்து போலீஸ் குழு ஒன்று மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பாகல் தலைமையில் அந்த கள்ள பட்டாசு தொழிற்சாலையை சோதனையிட்டது. அப்போது முகின் அன்சாரி என்பவர் வீட்டில் கள்ளத்தனமாக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருவதை போலீசார் கண்டுபிடித்தனர். அங்கிருந்த பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகளின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். கடந்த 12 ம் தேதி உத்தரபிரதேசத்தில் மைமா என்ற இடத்தில் கள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 பேர் பலியானார்கள். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தார்கள். இந்த சம்பவத்தை அடுத்து உத்தரபிரதேச போலீசார் உரிமம் இல்லாமல் நடத்தப்பட்டு வரும் பட்டாசு தொழிற்சாலைகளை சோதனை செய்து வருகின்றனர். தீபாவளி நெருங்கி வருவதால் உத்தரபிரதேசத்தில் பல இடங்களில் கள்ளத்தனமாக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்