முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறையில் கண்ணீர் வடித்தார் எடியூரப்பா

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2011      ஊழல்
Image Unavailable

 

பெங்களூர், அக்.22 - சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பெங்களூர் மெட்ரோ ரயில் திட்ட துவக்கவிழாவை டி.வி.யில் பார்த்து கண்ணீர் வடித்தார். கர்நாடகத்தில் கடந்த 2008 ம் ஆண்டு மத்தியில் முதல் அமைச்சராக பொறுப்பேற்ற பி.எஸ்.எடியூரப்பா, கார்டன் சிட்டி என்றும் தகவல் தொழில்நுட்ப நகர் என்றும் அழைக்கப்படும் பெங்களூரில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார். 

ஆனால் நில மோசடி வழக்கில் சிக்கிய எடியூரப்பா தனது முதல்வர் பதவியை 3 ஆண்டுகளுக்கு பிறகு  இழக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

தனது இரு மகன்கள், மருமகன் ஆகியோருக்கு அரசு நிலத்தை விற்பனை செய்ததில் அவர் ஊழல் செய்ததாக அவர் மீது லோக் அயுக்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி அவர் தற்போது பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் பெங்களூர் மெட்ரோ ரயில் திட்ட துவக்க விழா பெங்களூரில் நடைபெற்றது. அதன் நேரடி காட்சிகள் டி.வி.யில் காண்பிக்கப்பட்டன. அந்த காட்சிகளை எடியூரப்பா சிறையில் உள்ள தனது அறையில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்.

தான் மிகவும் நேசித்த தனது திட்டத்திற்கு  பட்ஜெட்டில் ரூ. 3200 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து பணிகளை அவ்வப்போது நேரில் பார்வையிட்டு நிறைவேற்றிய அந்த மெட்ரோ ரயில் திட்டம் துவக்கப்படும் நிகழ்ச்சியில் தான் இல்லையே என்று மனம் நொந்து அவர் அந்த காட்சிகளை பார்த்தபடியே கண்ணீர் விட்டு கண் கலங்கினார்.

இதை சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த திட்டத்தை தான் துவக்கி வைக்க வேண்டும் என்று ஆரம்பம் முதற்கொண்டே ஆசைப்பட்டார்  எடியூரப்பா. ஆனால் அதற்கு கொடுத்து வைக்கவில்லை. அதற்குள் அவர் சிறை வாசம் அனுபவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது.

கர்நாடகம் முழுவதும் மக்கள் எல்லோரும் தீபாவளி பண்டிகையை கொண்டாட உற்சாகத்துடன் இருக்கும் வேளையில் தான் இப்படி தனியே சிறையில் இருப்பதை எண்ணியும் அவர் வருத்தமுற்றார் என்று சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்