முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம், அக். - 31 - திருப்பரங்குன்றத்தில் இன்று கந்தசஷ்டி சூரசம்ஹார லீலை நடக்கிறது.  முருகப் பெருமானின் முதல் படை வீடு எனும் சிறப்பு பெற்ற அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 26 ம் தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி வெகு சிறப்பாக நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் கைகளில் காப்பு கட்டிக் கொண்டு கோயிலில் தங்கி விரத மேற்கொண்டு வருகின்றனர். தினம் காலை 11 மணிக்கும், மாலை 6.30 மணிக்கும் சண்முகார்ச்சனையும், யாகசாலை பூஜைகளும் நடக்கிறது.  தினம் இரவு 7 மணிக்கு தந்தத்தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சர்வ அலங்காரத்தில் சுப்பிரமணியசுவாமி, தெய்வானை அம்மன் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தில் ஆறு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இன்று மாலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் நடக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக நேற்று இரவு 7 மணிக்கு கோயிலுக்குள் உள்ள கம்பத்தடி மண்டபத்தில் கோயில் திருப்பணியாளர்கள் திருக்கண்ணில் வேல்வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை உற்சவர் சுப்பிரமணியசுவாமிக்கு பல்வேறு திரவிய அபிஷேகங்கள் முடிந்து சர்வ அலங்காரமாகி சிவபெருமான், கோவர்த்தனாம்பிகை, அம்பாளுடன் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு திருவிழா நம்பியார்பட்டருக்கு பரிவட்டம் கட்டப்பட்டு கோவர்த்தனாம்பிகை திருக்கரங்களில் இருந்த நவரத்தின வேலை சிவாச்சார்யார்கள் பெற்று நந்தியை வலம் வந்து முருகப் பெருமானிடம் சாத்துப்படி செய்தார். அதனை தொடர்ந்து தீபதூப ஆராதனைகள் நடந்தது. இரவு 8 மணிக்கு முருகப் பெருமான், தெய்வானை அம்மன் பூச்சப்பரத்தில் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை ஆறு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சன்னதி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு சொக்கநாதர் கோயில் முன்பு இன்று மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை சூரசம்ஹார லீலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.  

நேற்றைய படம்

திருப்பரங்குன்றம் கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் 4 ம் நாளான நேற்று முன்தினம் தபசு அலங்காரத்தில் அருள்பாலித்த முருகப் பெருமான். அருகில் தெய்வானை அம்மன். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்