முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழலை ஒழிக்கும் வல்லமை காங். தலைவர்களுக்கு இல்லை-அத்வானி பேச்சு

திங்கட்கிழமை, 7 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

லாபி(குஜராத்), நவ. - 8 - காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் நடைபெற்றுள்ள ஊழல்களால் தேசத்துக்கே பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. ஊழலை ஒழிக்கும் வல்லமை காங்கிரஸ் தலைவர்களுக்கு இல்லை என்று எல்.கே. அத்வானி கூறினார்.  ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டுள்ள எல்.கே. அத்வானி குஜராத் மாநிலம் லாபிக்கு சென்ற போது அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி அவரை நேரில் சென்று வரவேற்றார். இதையடுத்து அங்கு மக்கள் மத்தியில் பேசிய அவர் கூறியதாவது,  நாடாளுமன்ற ஜனநாயக முறையை இந்தியா நடைமுறைக்கு கொண்டு வந்த போது உலகின் முக்கிய தலைவர்கள் பலரும் கடுமையாக விமர்சித்தனர். இந்த எதிர்மறையான விமர்சனங்களால் இந்தியா துவண்டு விடவில்லை. ஒரு கட்டத்தில் வெற்றிகரமான ஜனநாயக நாடு என்பதை சர்வதேச அரங்கில் இந்தியா நிரூபித்துக் காட்டியது. இதையடுத்தே இந்தியாவை ஏளனமாக பேசிய உலக தலைவர்கள் எல்லாம் தங்களது தவற்றை உணர்ந்தார்கள். இது போன்ற பெருமைக்குரிய இந்திய நாடாளுமன்ற ஜனநாயக முறை பிரதமர் மன்மோகன்சிங்காலும், சோனியா காந்தியாலும் களங்கப்பட்டுள்ளது. அவர்களது ஆட்சியில் நடைபெற்ற அடுக்கடுக்கான ஊழல்களால் தேசத்துக்கே பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2008 ல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஆட்சியை தக்க வைப்பதற்காக எம்.பிக்களை அவர் விலை கொடுத்து வாங்கினாரோ, அன்றே பிரதமர் மீதான நம்பிக்கை போய் விட்டது. அவரது இந்த செயலை யாரும் மன்னிக்க மாட்டார்கள்.  வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள ரூ. 25 லட்சம் கோடி கறுப்பு பணத்தை கொண்டு வந்தால் நாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் ரூ. 4 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடியும். ஆனால் மத்திய அரசோ இதை கண்டுகொள்ளவே இல்லை. நாட்டிலேயே குஜராத்தில்தான் சிறந்த ஆட்சி நிர்வாகம் நடைபெறுகிறது. ஊழலற்ற மாநிலமாகவும் குஜராத் உள்ளது. இவையெல்லாம் முதல்வர் நரேந்திர மோடியால்தான் சாத்தியமாகியுள்ளது என்றார்.  நரேந்திர மோடி பேசும் போது, எங்கெல்லாம் ஊழலுக்கு எதிரான குரல் ஒலிக்கிறதோ அது நிச்சயம் காங்கிரசுக்கு எதிராகத்தான் இருக்கும். நம்மை ஆளுபவர்கள் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்றே மக்கள் நினைக்கின்றனர். ஆனால் ஊழல் இல்லாத ஆட்சியை தர இயலாத காங்கிரஸ் தலைவர்களுக்கு ஊழலை ஒழிக்கும் வல்லமை இல்லை. ஊழலுக்கு எதிராக போராடுவோம் என்று பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்