முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் ரயில் தடம் புரண்டு 20 பயணிகள் காயம்

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர், நவ. - 24 - ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காசிகந்த் என்ற இடத்தில் இருந்து ஸ்ரீநகருக்கு சென்று கொண்டிருந்த ரயில் ஒன்று தடம் புரண்டதில் 20 பயணிகள் காயமடைந்தனர்.  காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த 2008 ம் ஆண்டுதான் ரயில் சேவையே தொடங்கப்பட்டது. அப்படி தொடங்கப்பட்ட நாள் முதல் இப்போதுதான் முதல் முறையாக இது போன்ற தடம் புரளும் சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ரயிலின் என்ஜின் மற்றும் 2 பெட்டிகள் செதூரா கிராமத்தில் தடம் புரண்டன. ஸ்ரீநகரில் இருந்து 55 கி.மீ. தொலைவில் இந்த கிராமம் உள்ளது. குறிப்பிட்ட இடத்தில் நிற்காமல் 200 மீ தள்ளி ரயிலை டிரைவர் நிறுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக சில அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தில் காயமடைந்த 20 பேரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்தகவலை குல்காம் மாவட்ட உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து கேள்விப்பட்டதும் ரயில்வே அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். வடக்கு ரயில்வேயின் தலைமை ஏரியா மேனேஜர் உபேந்திர்சிங் இது பற்றி கூறுகையில், விசாரணைக்கு பிறகே ரயில் தடம் புரண்டதற்கான காரணம் தெரியவரும் என்று தெரிவித்தார். முன்னதாக நடத்தப்பட்ட பூர்வாங்க விசாரணையில் ரயிலின் பிரேக்கில் சில பிரச்சினைகள் இருந்ததாக தெரியவந்துள்ளது என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.  ஜார்கண்டு மாநிலத்தில் நேற்று முன்தினம்தான் ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ.சி. பெட்டியில் தீப்பிடித்து 7 பேர் பலியானார்கள். அந்த சம்பவம் நடந்த மறுநாள் இந்த சம்பவம் நடந்துள்ளது.  இதே போல் ஒரிசா மாநிலத்திலும் ஹவுரா செல்ல வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயிலும், ஒரு சரக்கு ரயிலும் ஜர்சுகுடா ரயில் நிலையத்தில் மோதிக் கொண்டன. இந்த மோதலில் 4 பயணிகள் காயமடைந்தனர். நல்லவேளையாக உயிரிழப்பு ஏதுமில்லை. ஆக, இரண்டே நாட்களில் மூன்று சம்பவங்கள் நடந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்