முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிதம்பரம் ராஜினாமா செய்ய தேவையில்லை: காங்கிரஸ்

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,டிச.9 - மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ப.சிதம்பரம் ராஜினாமா செய்யத்தேவையில்லை என்று காங்கிரஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.  ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று கோரி டெல்லி பாட்டியாலா சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டில் ஜனதா கட்சி தலைவர் டாக்டர் சுப்பிரமணியசுவாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிபதி சைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற விசாரணையின்போது இந்த வழக்கில் சாட்சிகளை விசாரிக்கவும் கோர்ட்டில் நேரடியாக ஆஜராகி குற்றவாளி கூண்டில் இருந்துகொண்டு வாக்குமூலம் அளிக்கவும் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இதனையொட்டி மத்திய அமைச்சர் பதவியில் இருந்து சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனையொட்டி பாராளுமன்றம் இருமுறை ஒத்திவைக்கப்பட்டது. கோர்ட்டின் இந்த தீர்ப்பு குறித்து கருத்து கூறும்படி ப.சிதம்பரத்திடம் நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். 

இந்தநிலையில் கோர்ட்டின் இந்த தீர்ப்பின்படி மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய தேவையில்லை. அவர் ராஜினாமாவும் செய்யமாட்டார் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் மத்திய சட்ட  அமைச்சருமான சல்மான் குர்ஷீத் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்துள்ளார். கோர்ட்டில் சுப்பிரமணியசுவாமி ஆஜராகத்தான் நீதிபதி அனுமதி அளித்துள்ளார். ப.சிதம்பரம் மீது வழக்கு எதுவும் பதவி செய்யவில்லை என்றார். சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்யவோ அல்லது வேண்டாமா என்று கோர்ட்டு எதுவும் கூறவில்லை. கோர்ட்டு உத்தரவில் எதுவும் இல்லை. அதனால் ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் சல்மான் குர்ஷீத் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்