முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லிக்குள் ஊடுருவிய பாக். உளவாளிகள் 2 பேர் கைது

செவ்வாய்க்கிழமை, 13 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,டிச.13 - டெல்லி நகருக்குள் ஊடுருவிய பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நகர போலீசார் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து ஆயுத பயிற்சி பெற்ற தீவிரவாதிகளும் ஐ.எஸ். ஐ. உளவாளிகளும் குளிர்காலத்தில்தான் இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சி செய்வார்கள். குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குள்தான் அவர்கள் அதிக அளவில் ஊடுருவல் செய்வார்கள். தற்போது கடும் குளிர் நிலவுவதாலும் இந்திய எல்லையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாலும் அவர்களால் அதிக அளவு ஊடுருவ முடியவில்லை. அதனால் தற்போது அவர்கள் பாகிஸ்தானில் இருந்து நேபாளத்திற்கு ஊடுருவி அங்கிருந்து ரயில் மூலமாகவோ அல்லது வேறு மோட்டார் வாகனங்கள் மூலமாக தலைநகர் டெல்லிக்குள் ஊடுருவி வருவதாக போலீசாருக்கும் உளவுத்துறைக்கும் தகவல் கிடைத்தது. பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண் உள்பட 2 உளவாளிகள் நேபாளத்திற்கு வந்து பின்னர் ரயில் மூலம் டெல்லிக்கு ஊடுருவி வருகிறார்கள் என்று டெல்லி தனிப்போலீஸ் மற்றும் கிரைம் பிராஞ்ச் போலீசாருக்கும் கடந்த வாரம் தகவல் கிடைத்தது. இதனையொட்டி தலைநகர் டெல்லியில் ரயில்நிலையங்களில் போலீசார் உஷாரானார்கள். கிடைத்த தகவலின்படி நேற்று நேபாளத்தில் இருந்து டெல்லி வந்த ஒரு ரயிலில் இருந்து பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண் உள்பட 2 பேர் இறங்கினர். அவர்களை உடனே போலீசார் கைது செய்தனர். அவர்கள் சட்டவிரோதமாக டெல்லிக்குள் ஊடுருவியதோடு அவர்களின் நாட்டை சேர்ந்து ஐ.எஸ்.ஐ. க்கு உளவு கூறுபவர்கள் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரிடம் இருந்து சில முக்கிய தஸ்தாவேஜூகளையும் போலீசார் கைப்பற்றினர். கைது செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் இம்ரான் (40) சோபியா கன்வால் (வயது 38). இவர்கள் இருவரும் கராச்சி நகரை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு பாகிஸ்தான் அரசு கொடுத்த பாஸ்போர்ட்டுகள் கைப்பற்றப்பட்டது. ஆனால் அவர்களிடம் இந்திய விசா எதுவும் இல்லை. இந்திய முத்திரையும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். இந்திய தேர்தல் அட்டை, பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் ஆகியவைகளும் அவர்களிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்