முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணைகளை ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டுவர கடிதம்

புதன்கிழமை, 14 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, டிச. 14 -​முல்லைப்பெரியாறு விவகாரம் பூதாகரமாக கிளம்பியுள்ள சூழலில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் நாட்டில் உள்ள அனைத்து அணைகளையும் ராணுவத்தின் பொறுப்பில் கொண்டு வர வேண்டும் என்று கோரியுள்ளார். தமிழ்நாடு-​கேரளா மக்களிடையே பகைமையை உண்டாக்கும் வகையில், முல்லைப்பெரியாறு விவகாரம் மோசமடைந்து வருகிறது. இரு மாநில முதல்வர்களும் அமைதி காக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தும், இரண்டு மாநிலங்களிலும், இப்பிரச்சினை தொடர்பாக ஆங்காங்கே வன்முறைகள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினையில் தலையிட்டு, நிலைமையின் தீவிரத்தை ஓரளவு குறைக்க உதவிய அப்துல்கலாம், இப்போது, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தனது கவனத்தை செலுத்தி உள்ளார். முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக, சில ஆலோசனைகளை தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அப்துல்கலாம் கடிதம் எழுதி உள்ளார். 

அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:-​ கேரளாவுக்கு அதிக மின்சாரம், தமிழகத்துக்கு அதிக தண்ணீர், இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான அணை பாதுகாப்பு, இந்த மைய கருத்தைக் கொண்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ள வேண்டும். முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு பதிலாக அணையை பலப்படுத்தும் வகையில் தற்போதுள்ள அணையில் 162 அடி உயரத்துக்கு பக்கவாட்டு சுவர் எழுப்பலாம். அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவதன் மூலம் தமிழக மக்களுக்கு கூடுதல் தண்ணீரும், கேரள மக்களுக்கு கூடுதல் மின்சாரமும் கிடைக்கும். அணையின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும். நாட்டில் உள்ள அனைத்து அணைகள், புதிதாக அமையும் அணைகள் இவற்றின் கட்டுப்பாடுகளையும், பராமரிப்பையும் ராணுவத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும். அமெரிக்கா உள்பட பல நாடுகளில் அணை கட்டுவது முதல் அதை கட்டுப்படுத்தி பராமரிப்பது வரை அனைத்து பணிகளையும் ராணுவமே மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் நதிகள் இணைப்பு போன்ற நடவடிக்கைகளின்போது எந்த பிரச்சினையும் ஏற்படுவதில்லை. முல்லைப் பெரியாறு பிரச்சினையால் இரு மாநில உறவும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது. இரு மாநில மக்களும் அமைதி காத்து தேசிய ஒருமைப்பாட்டை நிலை நாட்ட வேண்டும்.  இவ்வாறு கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்