முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி வழக்கு: ராசாவுக்கு எதிராக முன்னாள் உதவியாளர் சாட்சியம்

செவ்வாய்க்கிழமை, 20 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

புது டெல்லி,டிச. - 21 - 2 ஜி வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ராசாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் அவரது முன்னாள் உதவியாளர் சாட்சியம் அளித்தார். சி.பி.ஐ. விசாரணையின் போது தெரிவித்த கருத்துக்களில் அவர் உறுதியாக இருந்தார். சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக ராசா இருந்த போது அவரது கூடுதல் தனி செயலராக பணியாற்றியவர் ஆசீர்வாதம் ஆச்சாரி. 2 ஜி வழக்கில் இவரும் முக்கிய அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் 7 வது சாட்சியான இவர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் சாட்சியம் அளித்தார். கடந்த 1999 ம் ஆண்டு முதல் 2008 ம் ஆண்டு வரை ராசாவுடன் பணியாற்றினேன். அவர் அமைச்சராக இருந்த போது யுனிடெக், டி.பி. ரியாலிட்டி உள்ளிட்ட நிறுவனங்களின் பல்வேறு பெரிய கட்டுமான பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இது தொடர்பாக ஸ்வான் டெலிகாம் நிறுவன மேம்பாட்டாளர்கள் மற்றும் யுனிடெக் நிர்வாக இயக்குனர் ஆகியோர் ராசா மற்றும் அவரது உதவியாளர் சந்தோலியா ஆகியோரை அவ்வப்போது சந்தித்து பேசுவார்கள்.  2007 ம் ஆண்டு நவம்பர் 2 ம் தேதி பிரதமருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இருந்தது ராசாவின் கையெழுத்துதான். அந்த கடிதம் ராசாவின் அதிகாரபூர்வ இல்லத்தில் இருந்து தட்டச்சு செய்யப்பட்டது. இதற்காக ராசா என்னை தொலைபேசியில் அழைத்தார். நள்ளிரவு வரை அவரது இல்லத்திலேயே தங்கியிருந்து அந்த கடிதத்தை தயார் செய்து அனுப்பினோம். கலைஞர் டி.வி. தொடங்குவதற்கான அனுமதி பெறுவது தொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் கனிமொழியும், சரத்குமாரும் தொடர்பு கொண்டிருந்தனர். 2007 ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ராசா அதிக பதட்டமாகவும், மன அழுத்தத்துடன் காணப்பட்டார். அந்த சமயத்தில் ஒரு முறை அப்போதைய தொலை தொடர்பு துறை செயலர் மாத்தூரிடம் கடுமையான கோபத்துடன் உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்ததை நான் கவனித்தேன். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்பதை அதிகாரிகளுக்கு விளக்குவதற்காக தமிழக ரேசன் கடைகளுடன் 2 ஜி விற்பனையை ராசா ஒப்பிட்டார். இவ்வாறு அவர் சாட்சியம் அளித்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்