முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற 35 மீனவர்கள் தமிழகம் திரும்பினர்

புதன்கிழமை, 4 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜன.- 4 - முதல்வரின் தீவிர நடவடிக்கையின் எதிரொலியாக இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற 35 மீனவர்கள் நேற்று தமிழகம் திரும்பினர். இது குறித்து  தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- டிசம்பர் 18 ஆம் தேதி அன்று  தஞ்சாவூர் மாவட்டம் புதுப்பட்டினத்திலிருந்து 5 மீனவர்கள் சென்ற ஒரு படகு, புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திருந்து 4 மீனவர்கள் சென்ற ஒரு படகு, 19 ஆம் தேதியன்று கோட்டைப்பட்டினத்திலிருந்து 3 மீனவர்கள்  சென்ற ஒரு படகு, ஜெகதாப்பட்டினத்திலிருந்து 6 மீனவர்கள் சென்ற ஒரு படகு, 4 மீனவர்கள் சென்ற ஒரு படகு, 5 மீனவர்கள் சென்ற ஒரு படகு, 20​ஆம்தேதி அன்று நாகப்பட்டினத்திலிருந்து 6 மீனவர்கள் சென்ற ஒரு படகு,  22​ஆம் தேதி அன்று  ஜெகதாம்பட்டினத்திலிருந்து  1  மீனவர் சென்ற ஒரு படகு, 29​ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்திலிருந்து 6 மீனவர்கள் சென்ற 2 படகுகள் என மொத்தம்  10 படகுகளில் சென்ற 40 மீனவர்கள் மோசமான பருவநிலை காரணமாக  காற்றின் வேகத்தால், படகுகள் சேதமடைந்து  இலங்கை கடற்கரைப் பகுதியில் உள்ள  தீவு,  அனலைத்தீவு, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில்  உள்ள கரையோரம் ஒதுங்கியுள்ளனர்.   இதில் தஞ்சாவூர் புதுப்பட்டினத்திலிருந்து 5 மீனவர்கள் சென்ற படகு இலங்கையிலுள்ள அனலைத்தீவுக்கு அருகே தண்ணீரில் முழ்கியதில் ஒருவர் மட்டும் காப்பாற்றப்பட்டு இராமேஸ்வரம் கொண்டுவரப்பட்டுள்ளார். ஒரு மீனவர்  கடலில் முழ்கிவிட்டதாக அஞ்சப்படுகிறது..  எஞ்சிய 3  மீனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 9 படகுகளில் உள்ள 35 மீனவர்கள்  இலங்கை கடற்படையினரால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 23 மீனவர்களும், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்களும், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்களும் அடங்குவர்.
 தமிழக முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா   உத்தரவின் பேரில்,  தமிழக அரசு இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் மற்றும் மத்திய அரசின் வெளியுறவுத்துறை ஆகியவற்றை அணுகி எடுத்த தொடர் நடவடிக்கையின் விளைவாக இலங்கை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட 35 மீனவர்களும் எந்தவிதமான நடவடிக்கைக்கும் உட்படுத்தப்படாமல் இலங்கை நீnullதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.  விடுவிக்கப்பட்ட மீனவர்களை இந்திய கடலோரக் காவல்படையின்   உதவியுடன் தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தமிழக அரசால் செய்யப்பட்டன. இதனிடையில், வங்கக்கடலில் உருவான புயல் காரணமாக பருவநிலை மோசமடைந்ததால், அவர்களை உடனடியாக தமிழகத்திற்கு அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டது.  பருவநிலை சீரடைந்தவுடன், இலங்கையில் இருந்த  35 மீனவர்கள் இந்திய கடலோரக் காவல்படையினர் உதவியுடன் தமிழகத்திற்கு நேற்று அழைத்து வரப்பட்டனர்.  இவர்கள்  நேற்று மாலை மண்டபம் வந்து சேர்ந்தனர். தமிழக முதலமைச்சர்   ஜெயலலிதா   மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக 35 மீனவர்களும்  நேற்று பத்திரமாக  தமிழகம் திரும்பினர்.  
இவ்வாறு அந்த அரசு செய்தியில் கூறப்பட்டுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்