முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்கள் 13 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

நாகை, ஜன. 13 - நாகை மீனவர்கள் 13 பேரை நடுக்கடலில் துப்பாக்கி முனையில் சிங்கள கடற்படையினர் சிறைபிடித்தனர். தமிழக மீனவர்கள் எல்லையில் மீன் பிடித்து கொண்டிருக்கும் போது அத்துமீறி நுழையும் சிங்கள கடற்படையினர் அவர்களை தாக்கியும், அவர்கள் பிடித்து வைத்திருக்கும் மீன்களை கடலில் கொட்டியும், அவர்களை சிறைபிடித்தும், கொலை செய்தும் அட்டூழியத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கு சொந்தமான படகில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விஜயகுமார் மற்றும் அதே பகுதியை சேர்ந்த நந்தகோபால் மகன் கஜேந்திரன், பழனிவேல் மகன் செந்தில்நாதன், முத்துச்சாமி மகன் பழனிவேல், சுப்பிரமணியன் மகன் அருள்செல்வம், லெட்சுமணன் மகன் பர்குணம், சின்னயன் மகன் செல்வநாதன் ஆகியோர் ஒரு படகிலும், மற்றொரு படகில் கந்தசாமி மகன் வடிவேல் உட்பட 6 பேரும் மீன்பிடிப்பதற்காக சென்றனர். 

இந்நிலையில் இவர்கள் 13 பேரும் நேற்று முன்தினம் மாலை கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால் கரை திரும்பாததால் அவர்களது குடும்பத்தார் கவலையில் ஆழ்ந்தனர். அப்போது அதே பகுதியில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மற்றொரு படகினர் நேற்று அதிகாலை கரை திரும்பினர். அப்போது அவர்களிடம் கடலுக்கு சென்று திரும்பாத 13 மீனவர்களின் குடும்பத்தாரும் மீனவர்கள் பற்றி கேட்டனர். அதற்கு கரை திரும்பிய மீனவர்கள் கரை திரும்பாத மீனவர்கள் 13 பேரும் 2 படகுகளில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே நாங்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த பகுதிக்கு சிறிது தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். 

அப்போது அவர்களை சிங்கள கடற்படையினர் ஒரு படகில் வந்து சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் 13 பேரையும் சிறை பிடித்து தங்கள் படகில் ஏற்றி சென்று விட்டனர். இதை கண்ட நாங்கள் அங்கிருந்து தப்பி கரைக்கு திரும்பி வந்து விட்டோம் என்றனர். இந்த அதிர்ச்சி தகவலை கேட்ட மீனவர்கள் உடனடியாக மீன்வள துறை உதவி இயக்குனரிடம் புகார் தெரிவித்தனர். மேலும் மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் குறித்து அமைச்சர் ஜெயபாலுவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மீனவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்