முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அபாய நிலையில் மீனவர்கள் பிரச்சினை: ஞானதேசிகன்

ஞாயிற்றுக்கிழமை, 21 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.22 - தமிழக மீனவர்கள் பிரச்சினை அபாய நிலைக்கு செல்கிறது என்று ஞானதேசிகன் கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:–

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது. மீனவர் பிரச்சினை அபாயகரமான நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறது.

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இருந்தபோது மீனவர்களையும், படகுகளையும் மீட்பதற்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மீனவர்கள் பிடிபட்ட மறுநாளே விடுவிக்கப்பட்டார்கள். அதன்பிறகும் புத்தபிட்சுகள் மீதான தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களால் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவது தாமதமானது.

மோடி ஆட்சிக்கு வந்ததும் 100 நாளில் மீனவர்கள் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று பிரசாரம் செய்தார்கள். வெளியுறவு மந்திரி சுஷ்மாசுவராஜ், உண்ணாவிரதம் இருந்த மீனவர்களோடு தொலை பேசியில் பேசினார். இதனால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

ஆனால் இன்னும் பறிமுதல் செய்யப்பட்ட மீனவர்களின் படகுகள் விடு விக்கப்படவில்லை. அந்த படகுகள் ஏலம் விடுவதாக வரும் தகவல் வேதனைக்குரியது.

தேர்தல் நேரத்தில் பாரதீய ஜனதாவினர் என்ன வாக்குறுதி அளித்தார்களோ அதை நிறைவேற்ற வேண்டும். மீனவர் பிரச்சினையில் தமிழக பாரதீய ஜனதாவினர் குழப்பத்தில் இருக்கிறார்கள். ஆளுக்கொரு கருத்தை சொல்கிறார்கள்.

பிரதமர் மோடி, நேரடியாக ராஜபக்சேவுடன் பேசி மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சினை இருநாடுகள் சம்பந்தப்பட்டது. ஆனால் இங்குள்ள சில கட்சிகள் தேர்தலுக்கு தேர்தல் இந்த பிரச்சினையை கையில் எடுத்து மக்களை திசை திருப்புகின்றனர்.

இலங்கை பிரச்சினை தீர்ந்து விட்டால் பல கட்சிகளுக்கு அரசியல் நடத்த முடியாமல் ஆகிவிடும். இங்குள்ளவர்கள் அதிகம் பேச, பேசத்தான் ஆபத்தும் அதிகம்.

13–வது சட்ட திருத்தத்தை அமல்படுத்தி இலங்கையில் வாழும் தமிழர்கள் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கருத்து. இதைதான் ஆட்சியில் இருந்தபோது வலியுறுத்தினோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில பொருளாளர் கோவை தங்கம் உடன் இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்