முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெஸ்ட் இண்டீசிடம் ரூ. 250 கோடி நஷ்ட ஈடு கேட்டு கடிதம்

சனிக்கிழமை, 1 நவம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

பிரிட்ஜ்டவுன், நவ 2 - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்திய பயணத்தை பாதியில் ரத்து செய்து விட்டு நாடு திரும்பியது. 5 ஒரு நாள் போட்டி ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டம் மற்றும் 3 டெஸ்ட்டில் விளையாட அந்த அணி திட்டமிட்டு இருந்தது. சம்பள பிரச்சினை காரணமாக தர்மசாலாவில் நடந்த 4வது ஒரு நாள் போட்டி முடிந்த பிறகு அந்த அணி வீரர்கள் பாதியிலேயே ரத்து செய்து விட்டு நாடு திரும்பி உள்ளனர்.

இதனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடும் அதிர்ச்சி அடைந்தது. சமீபத்தில் நடந்த பிசிசிஐயின் அவசர செயற்குழுவில் வெஸ்ட் இண்டீசுடனான நேரடி போட்டி தொடரை எதிர்காலத்தில் நிறுத்தி கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் போட்டியினை பாதியில் ரத்து செய்ததற்காக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் ரூ. 250 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடிதம் அனுப்பி உள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் சஞ்சய் பட்டேல் கூறுகையில்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திடம் ரூ . 250 கோடி நஷ்ட ஈடு கேட்டு கடிதம் அனுப்பி உள்ளோம். போட்டியை பாதியில் ரத்து செய்ததற்காக ஏற்கனவே நஷ்ட ஈடு கேட்டும் கடிதம் அனுப்பி இருந்தோம். வெஸ்ட் இண்டீஸ் அணி போட்டியை பாதியில் ரத்து செய்ததால் எங்களுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. நாங்கள் அனுப்பிய நஷ்ட ஈடு கடிதத்துக்கு 1 5 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். அப்படி அளிக்காவிட்டால் சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் தேவ்கேமரூனுக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டது. ரூ. 250 கோடி நஷ்ட ஈட்டை வழங்காவிட்டால் கோர்ட்டில் இந்திய கிரிக்கெட் வாரியம் வெஸ்ட் இண்டீஸ் மீது வழக்கு தொடரும். போட்டியை பாதியில் ரத்து செய்ததால் ஒளிபரப்பு உரிமம், டைட்டில் மற்றும் அணி ஸ்பான்சர்ஷிப் டிக்கெட் ஆகியவற்றில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு இழப்பு ஏற்பட்டது. இதற்காகவே ரூ. 250 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்