முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு : 3 தனிப்படைகள் அமைத்துள்ள போலீசார் விசாரணை

சனிக்கிழமை, 4 மே 2024      தமிழகம்
Cong 2024-05-04

Source: provided

நெல்லை : தந்தை மாயமானதாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், எரிந்த நிலையில் சடலமாக அவர் மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் 3 தனிப்படைகள் அமைத்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரான கேபி ஜெயக்குமாரை காணவில்லை என்று அவரது மகன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். கடந்த 2 ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து சென்றதாகவும் அதன்பிறகு கே.பி. ஜெயக்குமார் வீடு திரும்பவில்லை எனவும் கூறியுள்ளார். தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கடந்த மாதம் ஜெயக்குமார் போலீசில் புகார் அளித்து இருந்தார்.கேபி ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், கரைசுத்து புதூர் அருகே உள்ள தோட்டத்தில் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நெல்லை மாவட்ட காங்கிரசில் முக்கிய நிர்வாகியாக இருந்த ஜெயக்குமார் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டு இருப்பது நெல்லையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா ? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதனிடையே, காணாமல் போன ஜெயக்குமார் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கடந்த மாதம் 30-ஆம் தேதி போலீசில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், இரவு நேரத்தில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாகவும் நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசனுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

மரண வாக்குமூலம் எனக் குறிப்பிட்டு மிரட்டல் விடுத்த நபர்களின் பெயர்கள், தொலைப்பேசி எண்கள் ஆகியவற்றையும் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளர். கட்சிக்காக பல லட்சங்களை செலவு செய்ததற்காக, அரசு ஒப்பந்தங்களை பெற்று தருவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் வாக்குறுதி கொடுத்ததாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாராளுமன்ற தேர்தலில் பல லட்சங்களை செலவு செய்ததாகவும், பணத்தை திருப்பி கேட்ட போது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், தன்னிடம் வாங்கிய பணத்திற்காக நிலத்தை எழுதிக் கொடுத்த ஒருவர் மும்பை ரவுடிகளை வைத்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும்  எஸ்.பிக்கு  அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கட்சி பகையால் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று ஜெயக்குமார் தனசிங்கின் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து