முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது

சனிக்கிழமை, 4 மே 2024      இந்தியா
Electronic-Machine 2023-10-

Source: provided

புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இறுதிநாளை முன்னிட்டு 94 தொகுதிகளில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே மற்றும் ராகுல்காந்தி, பிரியங்கா உள்ளிட்ட தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி கடந்த மாதம் 19-ம் தேதி 102 தொகுதிகளுக்கு முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. கடந்த 26-ம் தேதி 89 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. இதையடுத்து 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற செவ்வாய்கிழமை (7-ம் தேதி) ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 94 தொகுதிகளிலும் கடந்த 12-ந்தேதி மனு தாக்கல் தொடங்கியது. 19-ம் தேதி மனுதாக்கல் நிறைவு பெற்றது.

இதையடுத்து கடந்த மாதம் 22-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு 94 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியது. 3-ம் கட்ட தேர்தல் நடக்கும் 94 தொகுதிகளும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அடங்கி உள்ளது. இதில் குஜராத் மாநிலத்தில் 26 தொகுதிகள், கோவாவில் 2 தொகுதிகளுக்கு ஒரே கட்ட மாக ஓட்டுப்பதிவு நடப்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவில் 14 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகள், மகாராஷ்டிரத்தில் 11 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 10 தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் 4 தொகுதிகள், தத்ரா நகர்ஹவேலி யூனியன் பிரதேசத்தில் 2 தொகுதிகள், காஷ்மீரில் ஒரு தொகுதிக்கு ஓட்டுப்பதிவு நடத்தப்பட இருக்கிறது.

3-ம் கட்ட தேர்தலுக்கான 94 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) 94 தொகுதிகளிலும் மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது. நாளை தொகுதிக்கு தொடர்பு இல்லாதவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 7-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஓட்டுப்பதிவுக்கு ஏற்பாடுகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்ய தொடங்கி உள்ளனர். நாளை 94 தொகுதிகளிலும் ஓட்டுச்சாவடிகளுக்கு அனைத்து பொருட்களும் கொண்டு சென்று தயார் நிலையில் வைக்கப்படும். 7-ந்தேதி காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.

இந்த நிலையில் 94 தொகுதிகளிலும் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் தலைவர்கள் அதிகளவில் முற்றுகையிட்டுள்ளனர். மத்திய மந்திரி அமித்ஷா இன்று குஜராத்தில் தங்கியிருந்து சூறாவளி பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குஜராத்தில் இன்று பல்வேறு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று ஆதரவு திரட்ட உள்ளார்.

பிரதமர் மோடி ஏற்கனவே 94 தொகுதிகளில் ஆதரவு திரட்டி விட்டார். தற்போது 2-வது கட்டமாக சில நகரங்களில் இன்று பிரசாரம் செய்கிறார். அவர் ஜார்க்கண்ட், பீகார், உத்தரபிரதேச மாநிலங்களில் பிரசாரம் செய்கிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் இன்று 3-ம் கட்ட தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு சென்று இறுதி கட்ட ஆதரவு திரட்டுகிறார். 

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது சொந்த மாநிலமான கர்நாடகாவில் தங்கியிருந்து தீவிர ஆதரவு திரட்டி வருகிறார். கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ந்தேதி முதல் கட்ட ஓட்டுப்பதிவு முடிந்து விட்டது. மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி 2-வது கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 14 தொகுதிகளிலும் கார்கே தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து