பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென்னை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார்.
2019-பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னும் பின்னுமாக மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமூல் கட்சியினருக்கும், பா.ஜ.க.விற்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வந்தது. வடமாநிலங்களில் புதிய குடியுரிமை பட்டியல் கணக்கெடுப்பு, சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் சுக்லாவுக்கு எதிரான சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை போன்ற விவகாரங்களில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, மத்திய பா.ஜ.க. அரசு மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக சாடி வருகிறார்.
இந்த சூழலில், கொல்கத்தா விமான நிலையத்திற்கு மம்தா பானர்ஜி வந்தார். அப்போது, பிரதமர் மோடியின் மனைவியும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான யசோதா பென் விமான நிலையம் வந்திருந்தார். மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள கல்யாணேஸ்வரி கோயிலில் வழிபட 2 நாள் பயணமாக வந்த யசோதாபென், வழிபாட்டை முடித்த பின், ஊர் செல்வதற்காக கொல்கத்தா விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் யசோதா பென்னை கண்ட மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர். தொடர்ந்து, யசோதா பென்னுக்கு மம்தா புடவை ஒன்றையும் மம்தா பரிசளித்துள்ளார்.