சென்னை : மழைநீர் வடியாத செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர நடவடிக்கை எடுப்பது குறித்தும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியை அச்சுறுத்தி வந்த நிவர் புயல் கடந்த 26-ந் தேதி அதிகாலை கரையை கடந்தது.
கடலூர், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் புயல் பொருட்சேதம் மற்றும் உயிர் சேதத்தையும் ஏற்படுத்தி சென்றது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டது. கொட்டும் மழையில் அங்கு பார்வையிட்டு அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடலூருக்கும் சென்று நேரில் பார்வையிட்டார்.
இந்நிலையில் நிவர் புயல் காரணமாக பெய்த மழையால் சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் மழைநீர் வடியவில்லை. மழை நீர் தேங்கிய செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.
பள்ளிகரணை சென்ற முதலமைச்சருக்கு அங்குள்ள சதுப்பு நில பகுதியின் வரைபடத்தை காட்டி சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் விளக்கினார். அங்கு தண்ணீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட்டு இதனை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.
பின்னர் ஒக்கியம் மடு பகுதிக்கு சென்று முதலமைச்சர் ஆய்வு செய்தார். அங்கு மழைநீர் தேங்கி இருந்ததை பார்வையிட்டு விரைவில் நீர் வடிய நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார்.
இதன் பின் முட்டுக்காடு முகத்துவாரத்துக்கு சென்று மழைநீர் கடலுக்கு செல்வதை பார்வையிட்டார். முகத்துவாரத்தில் உள்ள அடைப்புகளை தூர்வாருவதையும் முதலமைச்சர் பார்த்தார்.
முதலமைச்சருடன் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் ஆகியோர் உடன் சென்றார்கள்.